அவர்கள் பொய்யர்கள்; ஈரான் போர் நிறுத்தம் முடிந்துவிட்டது - ட்ரம்ப் அதிரடி பேச்சில் சொல்வதென்ன?
கடந்த ஜூன் 17-ம் தேதி, ஈரான், அமெரிக்கா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதையொட்டி, இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்தன.
ஆனால், லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியது ஈரான். இந்த மூடலை மீறி ஹார்முஸை கடக்க முயலும் கப்பல்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது ஈரான்.
ஈரானின் அந்தத் தாக்குதலுக்கு பதிலடி தருகிறது அமெரிக்கா.
இதே மாதிரியான சம்பவம் ஒன்று தான் நேற்றும் நடந்தது.
இந்த நிலையில், நேட்டோ மாநாட்டிற்காக துருக்கி சென்றுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அங்கே, ஈரானுடனான போர் நிறுத்தம் முடிந்துவிட்டது என்கிற அறிவிப்பை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ட்ரம்ப் பேசியதாவது...
"என்னைப் பொறுத்தவரை எல்லாம் (போர் நிறுத்தம்) முடிந்துவிட்டது. இனிமேல் நான் அவர்களுடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை.
அவர்கள் மட்டமானவர்கள், உங்களுக்கு மட்டமானவர்கள் என்றால் என்னவென்று தெரியும்தானே? அவர்கள் அப்படித்தான். அவர்கள் ஒரு மனநோயாளிகள். ஒரு மோசமான கூட்டம்தான் அவர்களை வழிநடத்துகிறது.
அவர்கள் கொடூரமான மற்றும் வன்முறை குணம் கொண்ட மனிதர்கள். அவர்களிடம் மட்டும் அணுஆயுதங்கள் இருந்தால், அவர்கள் அதை நிச்சயம் பயன்படுத்தியிருப்பார்கள். என்னைப் பொறுத்தவரை, எல்லாம் முடிந்துவிட்டது.
நான் நமது பேச்சுவார்த்தைக் குழுவிடம் பேசுவேன்—அவர்கள் தொடர்ந்து பேச விரும்புகிறார்கள். அவர்கள் நல்ல மனிதர்கள்: ஸ்டீவ் வுடாஃப், ஜாரெட் குஷ்னர் ஆகியோர்.
ஆனால், அவர்கள் இறுதி முடிவுக்கு என்னிடம்தான் வந்தாக வேண்டும். என்னைப் பொறுத்தவரை, அவர்களுடன் பேசுவது வெறும் நேர விரயம் மட்டும்தான்.

அவர்கள் பச்சைப்பொய்யர்கள். நாம் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவோம், எல்லாரும் அதற்குச் சம்மதிப்பார்கள் - அணுஆயுதம் இருக்கக் கூடாது என்று.
ஆனால், நாம் உடன்படிக்கை செய்து முடித்த உடனே, அவர்கள் நேராக ஊடகங்களின் முன்னே போய் நின்று கொண்டு, நாங்கள் அதைப்பற்றிப் பேசவே இல்லை என்பார்கள்.
அவர்களிடம் ஏதோ ஏறுமாறாக இருக்கிறது, அவர்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. என்னைப் பொறுத்தவரை, எல்லாம் முடிந்துவிட்டது."
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


