நீதிமன்றத்தில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர்கள்; கலெக்டருக்கு அபராதம் விதித்த நீதிபதி; காரணம் என்ன?
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடைபெற்ற ஒரு கொலை வழக்கு தொடர்பான விசாரணை, ஐந்தாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், சாட்சி சொல்வதற்காக மருத்துவர் ஒருவர் கேரளாவில் இருந்து வந்து ஆஜராகி இருந்தார். ஆனால் கூடுதல் அரசு வழக்கறிஞர் இன்று விசாரணைக்கு ஆஜராகாததால் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், அரசு தரப்பு சாட்சியிடம் விசாரணையும் நடத்த முடியவில்லை.
அரசு தரப்பின் தவறால் இது ஏற்பட்டதால் கோவை மாவட்ட ஆட்சியர் சார்பாக மாநில அரசு பத்தாயிரம் ரூபாய் தொகையினை ஒரு வாரத்திற்குள் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும், இந்தத் தொகை மருத்துவரின் வருகை செலவு மற்றும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் என ஐந்தாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.
இதேபோல அதே நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட வழக்கில், சாட்சி சொல்வதற்காக திருவாரூரில் இருந்து வந்த காவல் உதவி ஆய்வாளரும், குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரும் ஆஜராகி இருந்தனர். ஆனால் கூடுதல் அரசு வழக்கறிஞர் ஆஜராகாததால் வழக்கு விசாரணை நடைபெறவில்லை.
இவர்கள் நீதிமன்றத்திற்குத் தேவையன்றி வரவழைக்கப்பட்டதால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது. அரசு தரப்பின் தவறால் இது ஏற்பட்டதால், கோவை மாவட்ட ஆட்சியர் சார்பாக மாநில அரசு ரூ.9,000 தொகையை நீதிமன்றத்தில் ஒரு வாரத்திற்குள் செலுத்த வேண்டும் என நீதிபதி சிவக்குமார் உத்தரவிட்டார்.
அதில் குற்றம்சாட்டபட்ட 5 பேருக்கும் தலா ஆயிரம் ரூபாயும், காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.4,000 இழப்பீட்டுத் தொகையாக வழங்க நீதிபதி உத்திரவிட்டார்.
தி.மு.க ஆட்சியில் நியமிக்கப்பட்ட அரசு வழக்கறிஞர்களுக்கான பணிக்காலம் கடந்த ஜூன் 30ம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், புதிய அரசு வழக்கறிஞர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கப்படாமல் உள்ளது.
இதனால் நீதிமன்றங்களில் புதிய அரசு வழக்கறிஞர்கள் பதவியேற்காமல் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகமால் உள்ள நிலையில், நீதிபதி ஆட்சியருக்கு அபராதம் விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


