அதிகாரமில்லா அலங்காரப் பதவிகளா? சி.வி.சண்முகம் தவிர்ப்பு! அதிமுக அதிருப்தி முகாமில் மீண்டும் ஆலோசனை

தவெக அரசுக்கு ஆதரவாகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தில் வாக்களித்த விவகாரத்தைத் தொடர்ந்து, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளிடம் இருந்து கட்சிப் பொறுப்புகளை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார்.

அதனைத் தொடர்ந்து, சி. விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட ஐந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். பின்னர், மன்னிப்புக் கடிதம் அளித்ததைத் தொடர்ந்து, நம்பிக்கைத் தீர்மானத்தில் ஆதரவாக வாக்களித்த எம்.எல்.ஏ.க்களை மீண்டும் கட்சிக்குள் இணைத்துக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பொறுப்புகளை மீண்டும் வழங்கவில்லை. இதுவே எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று அமைப்பு ரீதியான மாற்றங்களை ஏற்படுத்தி பல்வேறு நபர்களுக்குப் புதிய பொறுப்புகளை அறிவித்தார் எடப்பாடி.

எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம்

தலைமை நிலைய செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த எஸ்.பி. வேலுமணியைக் கட்சியில் துணைப் பொதுச்செயலாளராகவும், மாவட்ட செயலாளராக இருந்த தங்கமணி, கே.பி. அன்பழகன் உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் பதவியும், அதேபோல் மற்றொரு மாவட்ட செயலாளரான எம்.ஆர். விஜயபாஸ்கருக்குக் கட்சியின் கொள்கைப் பரப்பு இணைச் செயலாளர் பொறுப்பும் கட்சியில் வழங்கப்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து விமர்சித்து வரும் சி.வி. சண்முகத்திற்குத் தற்போது வரை பொறுப்புகள் ஒதுக்கப்படவில்லை.

இவை அனைத்தும் பெயரளவில் பெரிய பதவிகளாகப் பார்க்கப்பட்டாலும், அதிகாரமற்ற அலங்காரப் பதவிகளாகவே அரசியல் ரீதியாகப் பார்க்கப்படும். இந்நிலையில்தான், பெயரளவிற்குக் கொடுக்கப்பட்டுள்ள இந்தப் பொறுப்புகளைத் தாங்கள் ஏற்கப் போகிறார்களா, இல்லையா என்பது குறித்து ஆலோசிக்கச் சி.வி. சண்முகம் அலுவலகத்தில் அதிருப்தித் தலைவர்கள் இன்று மீண்டும் சந்தித்து ஆலோசிக்க உள்ளனர்.

வேலுமணி

அதேநேரத்தில், தற்போது வழங்கப்பட்டுள்ள புதிய பதவிகள் பெயரளவில் முக்கியமானதாக இருந்தாலும், நடைமுறையில் அதிகாரமற்ற, நிர்வாகச் செல்வாக்குக் குறைந்த பதவிகளாகவே அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகின்றன. ஒரு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கிளைச் செயலாளரைக்கூட நியமிக்கும் அதிகாரம் இந்தப் பதவிகளுக்கு இல்லை.

இந்நிலையில், பெயரளவிலான இந்தப் பொறுப்புகளை ஏற்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்தும், கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்தும் சி.வி. சண்முகத்தின் அலுவலகத்தில் அதிருப்தி முகாமைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் இன்று காலை மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.