சிவகாசி: 10 ஆண்டுகளாக மூடிக்கிடந்த பட்டாசு ஆலையில் திடீர் தீ விபத்து; 3 பேர் காயம் அடைந்தது எப்படி?

 விருதுநகர் மாவட்டம், சிவகாசி, அம்மன் கோவில்பட்டியைச் சேர்ந்த முத்தையா என்பவருக்குச் சொந்தமான  ’திபிரில்லியண்ட்’ பட்டாசுத் தொழிற்சாலை நாரணபுரம் -  செங்கமலப்பட்டி சாலையில் செயல்பட்டு வந்தது.

உடல்நலக்குறைவால் முத்தையா  இறந்த பிறகு தொழிற்சாலையின் உரிமம் வேறு பெயருக்கு மாற்றப்படாமல் குடும்பத்திலுள்ளவர்களிடையே ஏற்பட்ட சொத்துப் பிரச்சனை காரணமாக கடந்த 10  வருடங்களாக செயல்படாமல் மூடிக்கிடக்கிறது. பூட்டிக்கிடக்கும் இந்த பட்டாசுத் தொழிற்சாலை வளாகத்தை சமூகவிரோதிகள் மது அருந்துதல் போன்ற செயல்பாட்டுக்கான கூடாரமாகப் பயன்படுத்தி வந்துள்ளனர்.  

தீ விபத்து ஏற்பட்ட அறை

இந்த நிலையில், இந்த  தொழிற்சாலையின்  அருகிலுள்ள ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஹரிபரத், சுபாஷ் மற்றும்  மாரிச்செல்வம்  ஆகிய மூன்று இளைஞர்கள், இந்த தொழிற்சாலையின் ஒரு அறையில்  புகைப்பிடித்துவிட்டு  சிகரெட்டை அணைக்காமல் அந்த சிகரெட்துண்டுகளை அப்படியே தூக்கி வீசிப் போட்டுள்ளனர். சிகிரெட் துண்டிலிருந்த நெடுப்பு பட்டு  அங்கிருந்த கழிவுபட்டாசுப் பொருள்களுடன் கிடந்த கருந்திரியில் பட்டு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த  விபத்தில் 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்தனர். சம்பவ இடத்தை தீயணைப்பு வருவாய் மற்றும் காவல் துறையினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வு செய்த அதிகாரிகள்

இதுகுறித்து சிவகாசி கிழக்கு பகுதி போலீஸார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். “10 ஆண்டுகளாக இயங்காமல் இருந்த ஆலையில் கிடந்த வீரியம் மிகுந்த வேதிப்பொருளால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகள் ஆனாலும் அதன் வீரியத்தன்மை எப்படி உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என பட்டாசுத் தொழிலாளிகள் கூறியுள்ளனர்,.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.