மது கேட்டு தொல்லை கொடுத்த மனைவி – விஷம் கொடுத்து கொன்ற கணவர் | கோவையில் அதிர்ச்சி

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கரவழி மாதாப்பூர் அருகில் உள்ள அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி (28). இவருக்கு திருமணமாகி  ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த மீன் வியாபாரியான   ஆனந்தகுமார் (29) என்பவருடன் மகேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

பின்னர் இருவரும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே ஆனந்தகுமாருக்கும், மகேஸ்வரிக்கும் மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 22ம் தேதியன்று மாலை இருவரும் மது அருந்தியதாக தெரிகிறது.

ஆறுமுகம்

அப்போது மகேஸ்வரி மேலும் மது வேண்டும் எனக் கேட்டு தொல்லை கொடுத்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் கோபமடைந்த ஆனந்தகுமார் மதுவில் விஷத்தைக் கலந்து கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் மது அருந்திய மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து ஆனந்தகுமார் அவரது அப்பா ஆறுமுகம் மற்றும் உறவினர் சுப்பிரமணி ஆகியோரிடம் கூறியுள்ளார். அங்கு வந்த அவர்கள் உதவியுடன் ஆனந்தகுமார் வெள்ளை நிற பையில் மகேஸ்வரியின் உடலை போட்டு, மோட்டார் பைக்கின் முன்புறம் வைத்து அதன் மேல் மீன் வலையை போட்டு மூடி எடுத்து சென்றுள்ளார். பின்னர் மூவரும் சேர்ந்து மகேஸ்வரியின் உடலை நொய்யல் ஆற்றில் வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சுப்பிரமணி
சுப்பிரமணி

இந்த நிலையில் நேற்று காலை நொய்யல் ஆற்றில் பெண் சடலம் கிடப்பதாக கருமத்தம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் உயிரிழந்தது மகேஸ்வரி என்பது தெரியவந்தது. இதையடுத்து ஆனந்தகுமாரை பிடித்து காவல் துறையினர் விசாரித்தபோது, மதுவில் விஷம் கலந்து கொடுத்து மகேஸ்வரியை கொலை செய்து செய்து ஆற்றில் வீசியதை ஒப்புக் கொண்டுள்ளார்.

இதையடுத்து ஆனந்தகுமார், ஆறுமுகம், சுப்பிரமணி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மூவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.