ஆள் பற்றாக்குறை முதல் Party Fund வரை! - EB வெள்ளை அறிக்கையில் திமுக மீது வைக்கப்பட்ட 5 புகார்கள்!
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார். 2001 முதல் 2026 மார்ச் வரை விரியும் இந்த வெள்ளை அறிக்கையின் மூலம் கடந்த திமுக அரசின் மீது நிறைய குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார். அவர் முன்வைத்த டாப் 5 குற்றச்சாட்டுகள் என்னென்ன?
ஆள் பற்றாக்குறை:
இன்றைய தேதிக்கு மின்சார வாரியத்திற்கு 1,40,635 ஊழியர்கள் தேவை. ஆனால், 74,714 ஊழியர்கள் மட்டுமே பணியில் இருக்கின்றனர்.
இதிலும் இன்னும் 16000 பேர் அடுத்த 5 ஆண்டுகளில் ஓய்வை எட்டிவிடுவர். ஏற்கனவே பணிச்சுமையில் இருக்கும் ஊழியர்கள் மீது இன்னும் பணிச்சுமை ஏறும்.
இந்தப் பிரச்னையை தீர்க்க கடந்த திமுக அரசு ஒன்றுமே செய்யவில்லை. கடந்த 5 ஆண்டுகளில் வெறும் 343 பேரை மட்டுமே திமுக அரசு மின்வாரியத்துக்கு பணிக்கு எடுத்திருக்கிறது. ஆள் பற்றாக்குறையை சரி செய்ய இந்த ஆண்டுக்குள் 15,000 ஊழியர்களை புதிதாக பணியில் சேர்க்க தவெக அரசு முடிவெடுத்திருக்கிறது.

கொடி கட்டி பறந்த Party Fund:
மின் துறையில் எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் அதில் 30-35% கமிஷனாக கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும். பணிமாறுதல், பணி நியமனம் என எல்லாவற்றுக்கும் திமுக அமைச்சர் Party Fund வாங்கியிருக்கிறார். 2021 இல் 5000 பேரிடம் கேங் மேன் பணிக்காக Party Fund வாங்கிவிட்டு பணி கொடுப்பதாக சொல்லி இன்று அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை கொடுக்கவில்லை. Party Fund ஆல் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது புகார் கொடுத்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுப்போம்.
செலவு எதுக்கு?
மின் கட்டணத்தை உயர்த்தி மின் வாரியத்தின் வருவாயை திமுக அரசு பெருக்கியிருக்கிறது. ஆனால், எவ்வளவு வருவாய் பெருகியதோ அதே அளவுக்கு செலவும் அதிகரித்திருக்கிறது, கடனும் அதிகரிக்கிறது. மின்வாரியத்தின் மொத்தக் கடன் 2,47,130 கோடி ரூபாய். அதில் திமுக அரசில் மட்டுமே 87,399 கோடி ரூபாய் கடன் வாங்கப்பட்டிருக்கிறது. வருவாயையும் கூட்டி இவ்வளவு கடனையும் அதிகரித்து அப்படி என்னதான் செலவு செய்தீர்கள்?

மின்வாரியத்துக்கு தேவையான அளவுக்கு ஊழியர்களை கூட பணியமர்த்தவில்லையே. வருவாய் கூடியதால் மின்வாரியம் எந்தவிதத்திலும் முன்னேற்றம் அடையவில்லையே. ஒரு டிரான்ஸ்பார்மர் 8 லட்ச ரூபாய் என்றால் அதை 13 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறார்கள். டிரான்ஸ்பார்மர் ஊழல் போலவே கண்டக்டர்கள் (Conductor) வாங்கப்பட்டதிலும் 9 டெண்டர்களில் ஊழல் நடந்திருக்கிறது. அதற்கான விசாரணையை தொடங்கிவிட்டோம்.
தொழில் வளர்ச்சி எங்கே?
தமிழகத்தில் முதலீடுகள் அதிகரித்திருப்பதாகவும், தொழிற்சாலைகள் பெருகியிருப்பதாகவும் திமுகவினர் கூறுகின்றனர். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் மின் பயனாளர்களின் எண்ணிக்கை 14% ஆக மட்டுமே அதிகரித்திருக்கிறது. கடந்த 25 ஆண்டுகளில் எந்த ஆட்சியிலும் இவ்வளவு குறைவாக பயனாளர்களின் எண்ணிக்கை உயர்ந்ததில்லை. பயனாளர்கள் எண்ணிக்கை கால் நூற்றாண்டோடு ஒப்பிடுகையில் இத்தனை குறைவாக இருக்கையில் எப்படி தொழில் வளர்ச்சி அதிகரித்ததாக கூறினர்?

உற்பத்தி எங்கே?
தமிழ்நாட்டுக்கு ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 21000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், மின்சார வாரியம் வெறும் 3495 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே உற்பற்றி செய்கிறது. அதாவது நமக்கு தேவைப்படும் மின்சாரத்தில் ஐந்தில் ஒரு பங்கை கூட நம்மால் உற்பத்தி செய்ய முடியவில்லை. இந்த நிலையை போக்க சூரிய ஒளி மின்சாரத்தை மின்கலன்களின் சேமித்து வைத்து உச்சபட்ச பயன்பாட்டு நேரங்களில் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.!
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


