கல்வராயன் மலை: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - ஆசிரியரை போக்சோவில் தூக்கிய சிங்கப்பெண் போலீஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் தமிழக அரசின் ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு கல்வராயன்மலையின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த சுமார் 100 மாணவ, மாணவிகள் தங்கிப் படித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த சிங்கப்பெண் போலீஸார் இப்பள்ளிக்கு சென்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அப்போது பாலியல் சீண்டல்கள், அத்துமீறல்களை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து மாணவிகளுக்கு தெளிவுபடுத்தினர். தொடர்ந்து, அப்படி யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் தங்களிடம் தனியாக தெரிவிக்குமாறும் கூறினர் சிங்கப்பெண் போலீஸார்.

போக்சோ வழக்கு

அதன்படி அவர்களை தனியாக சந்தித்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சிலர், கணினி ஆசிரியர் சுரேஷ் என்பவர் தங்களை தொடர்ச்சியாகப் பாலியல் ரீதியில் தொல்லை செய்வதாகக் கூறிக் கதறி அழுதிருக்கின்றனர்.

அதில் அதிர்ந்து போன சிங்கப்பெண் போலீஸார் கரியாலூர் காவல் நிலையத்திற்கும், மாணவிகளின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அந்தப் பள்ளிக்கு விரைந்த அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை செய்தனர்.

அதில் ஆசிரியர் சுரேஷ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதால், அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.