ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கு: உ.பி. அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி!
ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிரான உத்தரபிரதேச அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில், தலித் சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில் இது தொடர்பாக தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்த அலகாபாத் உயர்நீதிமன்றம், ‘பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். பெண்ணின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’ என உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக உத்தரபிரதேச அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு “இதுபோன்ற விவகாரங்களில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஒரு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது அதிர்ச்சி அளிக்கிறது” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்
.
முன்னதாக ஹத்ராஸ் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட நான்கு குற்றவாளிகளில் மூன்று பேரை வழக்கிலிருந்து விடுதலை செய்து கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது பெரும் விவாத பொருளானது குறிப்பிடத்தக்கது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


