அமெரிக்கா அல்ல! இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வர ஸ்டாலினின் ”உத்தரவு எண் 227”தான் காரணம்!
உத்தரவு எண் 227 என்றால் என்ன?
இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக்கொண்டு வந்தது அமெரிக்கா என்று வரலாற்றில் இடம் பெற்றிருப்பது உண்மையா? அல்லது சோவியத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலினால் கொண்டுவரப்பட்ட 227 என்ற உத்திரவினாலா? என்பதை பற்றி கொஞ்சம் அலசி பார்க்கலாம்.
கோடிக்கணக்கான உயிர்களை பலிகொண்ட உலகப் போர்கள்!
மனித குலம் தன்னைத் தானே அழித்துக் கொள்ள உருவாக்கிக் கொண்ட மிகக் கொடூரமான விஷயங்களில் ஒன்று போர். அதுவும் உலகப் போர் என்பது உச்சக் கட்ட கொடூரம். யாரோ ஒரு சிலரின் பேராசைக்காக லட்சக்கணக்கான மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து சாக வேண்டிய சூழலை போர் உருவாக்கும். போர் தொடங்குவதற்கு ஒரு சில அர்ப்பக் காரணங்கள் தேவைப்படலாம். ஆனால், போரை முடிப்பது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. போரை தொடங்கியவர்களே நினைத்தாலும் முடிக்க முடியாது. அரசர் காலங்களில் நடந்த போர்களுக்கு வேறு அர்த்தங்கள் உண்டு. நாடு பிடிக்கும் கொள்ளை அதில் பிரதானமானதாக இருக்கும். ஆனால், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து ஜனநாயக முறையிலான அரசாங்கங்கள் உருவான பிறகும் மீண்டும் போர்கள் நிகழ்ந்தது என்பது மன்னிக்க முடியாத குற்றங்களாகும். 1914 ஆம் ஆண்டு தொடங்கி 1918 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற முதல் உலகப் போரில் கிடைத்த பாடங்களை கொண்டாவது அதற்கடுத்து உலகப்போர்கள் நிகழாமல் தடுத்திருக்க வேண்டாம். ஆனால், அடுத்த 21 வருடங்களிலேயே இரண்டாம் உலகப் போர் தொடங்கிவிட்டது. கிட்டதட்ட 6 வருடங்கள் நடைபெற்ற இந்த உலகப் போரில் பல கோடி மக்கள் தங்கள் உயிர்களை இழந்தார்கள்.
போரை தொடங்கி வைத்த ஹிட்லர்! 10 கோடி பேர் பலியான சோகம்
ஜெர்மனி என்பது அப்போது ஒரு அடிபட்ட பாம்பாக இருந்தது. முதல் உலகப் போரில் சந்தித்த தோல்வி அதன் இதயத்தில் ஆறாத வடுவாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம் வெர்சைல்ஸ் உடன்படிக்கையில் ஜெர்மனி கொடுத்த விலைதான். ஜெர்மனியின் இந்த சூழலை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் அடால்ப் ஹிட்லர். ஒரு தேசத்தை எப்படி தவறாக வழிநடத்தக் கூடாது என்பதற்கு ஹிட்லரே மிகச் சிறந்த உதாரணம். போலந்து நாட்டின் மீது ஹிட்லர் தாக்குதலை தொடங்கிய 1939 ஆம் ஆண்டின் செப்டம்பர் 1 ஆம் தேதி உலக வரலாறு நிச்சயம் மறக்காது. ஏனெனில் ஹிட்லர் இதனை செய்துவிடக் கூடாது என அன்று பலரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால், எல்லோரது எண்ணத்திற்கு மாறாகவே அது நிகழ்ந்துவிட்டது. போரில் அச்சு நாடுகளான ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒரு அணியாகவும், நேச நாடுகளான எதிரணியில் சோவியத் யூனியன், பிரிட்டன், ஃபிரான்ஸ், போலந்து ஆகிய நாடுகள் இருந்தன. நேச நாடுகளில் பின்னர் அமெரிக்காவும் இணைந்து கொண்டது. உலகம் அதுவரை சந்தித்திராத கொடூரங்கள் இந்த உலகப் போரில் அரங்கேறியது. இரு தரப்பிலும் சுமார் 10 கோடிக்கும் மேல் மக்கள் உயிரிழந்ததாக ஆய்வறிக்கை கூறுகிறது.

ஹிட்லர் யாரை குறிவைத்து போர் செய்தார்?
ஹிட்லரின் போரானது தொடக்கத்தில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ்க்கு எதிராகவே அதிக அளவில் இருந்தது. ஜெர்மனியை சுற்றியுள்ள ஒவ்வொரு நாடாக சென்று வலிமைமிக்க தன்னுடைய படையால் தாக்குதல் நடத்தி வெற்றிகளை குவித்தார். இறுதியாக சோவியத் யூனியனை குறிவைத்து மிகப்பெரிய பாய்ச்சலில் தாக்குதலை நடத்தினார். ஜெர்மனியின் நாஜி படைக்கும் சோவியத் யூனியனின் செம்படைக்கும் இடையே மிகப்பெரிய அளவில் போர் நடைபெற்றது.
சோவியத் யூனியனின் உள்ளே நுழைந்து பெரும்பாலான பகுதிகளை நாஜிப் படையினர் கைப்பற்றிவிட்டார்கள். ஹிட்லரின் கையே நீண்ட காலம் ஓங்கியிருதது.

சோவியத் யூனியனி ஊடுருவிய நாஜிப்படைகள்!
தங்களது படை வீரர்களின் இழப்புகளை பொருட்படுத்தாமல், 80 சதவிகித நாசிக் படையினர், சோவியத் யூனியனுக்குள் ஆழமாக ஊடுருவி, புதிய பகுதிகளை கைப்பற்றி, அவர்களது நகரங்களையும் கிராமங்களையும் அழித்து, சூறையாடினர். சோவியத்திற்கு உட்பட்ட பகுதியான வோரோஷிலோவ்கிராட், ஸ்டாரோபெல்ஸ்க், ரோசோஷ், குபியன்ஸ்க், வாலுய்கி, நோவோசெர்காஸ்க், ரோஸ்டோவ் ஆன் டான், வோரோனேஜின் பாதி ஆகியவற்றை ஜெர்மன் கைப்பற்றியது. இதனால் தங்கள் தோல்வியை தழுவுவது உறுதி என்று தெரிந்த குடிமக்களும், செம்படை வீரர்களும் தங்களின் உயிரைக்காத்துக்கொள்ள தானாகவே நாசிக் படையினரிடம் சரணடைந்தனர். அவர்களின் ஆயுதங்களும், உடமைகளும் அபகரிக்கப்பட்டன.

திருப்புமுனையை ஏற்படுத்திய இடம்!
Battle of Stalingrad (1942-43).. இந்த இடத்தில் நடந்த ஒரு போர் தான் சோவியத் யூனியனின் தலையெழுத்தை மாற்றியது என்று கூறலாம். அச்சமயத்தில் ஹிட்லரின் எண்ணமானது ஸ்டாலின்கார்டை பிடிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஏனெனில், ஸ்டாலின்கார்ட் அருகில் ஓல்கோரிவர் என்ற ஆற்றின் அருகில், caucasus என்ற எண்ணெய் கிணற்றை கைப்பற்றுவதை முக்கிய நோக்கமாக ஹிட்லர் கொண்டிருந்தார்.
இவ்வாறு, ரஷ்ய படை வீரர்களையும் பொது மக்களையும் ஹிட்லர் கைது செய்ததுடன் அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு அங்கு பல அநீதிகள் ஏற்படுத்தப்பட்டது. இதை கண்ட ஜோசப் ஸ்டாலின் சற்றும் மனம் தளாராது, நாட்டினை காப்பாற்றவும், நாட்டு மக்களை காப்பாற்றவும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார். இச்சமயத்தில் தான் தனது செம்படை ராணுவத்திற்கும் குடிமக்களுக்கும் ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
ஜோசப் ஸ்டாலின் பிறப்பித்த உத்தரவு!
” உக்ரைன், பெலோருசியா, பால்டிக்ஸ், டொனெட்ஸ்க் பேசின் மற்றும் பரந்த பிரதேசங்களை நாம இழந்துவிட்டோம், அதாவது பல மக்கள், உணவு, உலோகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தாவரங்களை இழந்துள்ளார்கள். இச்சமயத்தில் நாம் மனம் தளர்ந்து, பின்வாங்குவதால், நம்மையும் நம் தாய்நாட்டையும் அழிப்பதற்கு சமமாகும். எனவே நாம் எதிரிக்கு விட்டுச் செல்லும் ஒவ்வொரு புதிய பிரதேசமும் நமது எதிரியைப் பலப்படுத்தி, நம்மை, நமது பாதுகாப்பை, நமது தாய்நாட்டை பலவீனப்படுத்தும். ஆகவே... ஒவ்வொரு குடிமகன்களும் எனது உத்தரவுக்கு அடிபணிய வேண்டும்” என்று போடப்பட்ட ஒரு உத்தரவு தான் “உத்தரவு எண் 227”. அதன்படி Battle of Stalingrad நடந்த போர் திருப்பு முனையாக அமைந்தது.

சாகும் வரை போராடுங்கள்.. தற்கொலை வேண்டாம்!
இதன் முழுமையான அர்த்தம் “NOT ONE STEP BACK" “FIGHT TO DEATH NOT SUSIDE" அதாவது போரில் சாகும் வரை போரிடவேண்டும். போரினால் உயிர் தியாகம் செய்ய வேண்டுமே தவிர தற்கொலையால் அல்ல... என்ற பொருள் பதிந்த உத்தரவு ஆகும். இந்த உத்தரவால், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போருக்கு தள்ளப்பட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆயுதம் ஏந்தினர். மூவருக்கு ஒரு துப்பாக்கியும் அவர்களுக்கு ஒரு பிரட்டும் ஒரு வெங்காயம் மட்டுமே உணவாக வழங்கப்பட்டது. சோவியத் யூனியனி செம்படை வீரர்களாக சாமானிய மக்கள் மாறினர். நாஜிப் படைகளுக்கு எதிராக வீரம் செறிந்த ஒரு போரை நிகழ்த்தினர்.

இத்தகைய உத்திரவால் ஸ்டாலினின் எண்ணப்படி , நாசிக் படையினரின் ஆற்றல் கட்டுப்படுத்தப்பட்டு, அவர்கள் மேலும் ரஷ்யாவிற்குள் முன்னேறுவது தடை செய்யப்பட்டது. இத்தகைய சந்தர்ப்பத்தை பயன்படுத்திய ஸ்டாலின் அதிகளாவு ஆயுதங்களையும் பீரங்கிகளையும் உற்பத்தி செய்யவும், இறக்குமதி செய்யவும் கால அவகாசம் கிடைத்தது. அதே சமயம். நாட்டிற்காக போராடும் படை வீரர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்தது.
திருப்பி அடித்தது செம்படை!

நாஜிப்படைகளை நாட்டின் உள்ளே முழுவதுமாக விட்டு ஒரு கட்டத்தில் சோவியத் படை திருப்பி அடித்தது. தொடர்ச்சியாக நாஜிப்படைகளை விரட்டிச் சென்று ஜெர்மனி வரை சென்றுவிட்டனர். ஜெர்மனிக்கே சென்று சோவியத் யூனியனின் செம்படை வீரர்கள் கொடியை நாட்டியது வரலாற்றில் சிறப்பு மிக்க ஒரு தருணமாக இருந்தது. ஏனெனில் உலகையே அபாய குழிக்குள் தள்ளிக் கொண்டிருந்த ஹிட்லரின் நாஜிப்படைக்கு இந்த செம்படைதான் முடிவு கட்டியது. சோவியத் யூனியன் மட்டும் இந்தப் போரில் 2 கோடி மக்கள் பலிகொடுத்து உலகை காத்தது.

இத்தகைய 227 என்ற உத்திரவு பிறப்பித்ததன் விளைவாக இறுதியில் சோவியத் யூனியன் வெற்றி பெற்றது. இதில் பிரிட்டனும், பிரான்ஸும் வெறும் 20 % நாசிக் படையினரை எதிர்கொண்டனர். இதில் சோவியத் யூனியன் வெற்றிபெரும் நிலையில் மேக் இன் அமெரிக்கா என்று எழுதியவர் யார் என்று தெரியவில்லை.
ஜெயஸ்ரீ அனந்த்
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


