நானும், அவரும் இரவு முழுவதும் பேசிக்கொண்டிருப்போம் சிவாஜி - ஆஷா போஸ்லேவின் ராக்கிமலர்
இன்று பிரபல பாடகி ஆஷா போஸ்லே காலமாகியுள்ளார்.
மகாராஷ்டிராவில் பிறந்த ஆஷா போஸ்லே தமிழ் திரைப்படங்களில் பாடி மட்டும் தமிழ்நாடு ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கவில்லை. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தங்கை என்பதாலும் தமிழ் நெஞ்சங்களில் இவருக்கு ஸ்பெஷலான இடமுண்டு.
மும்பையில் சிவாஜி தயாரித்த பல படங்களில் இவரும், இவரது சகோதரி லதா மங்கேஷ்கரும் பாடல்களைப் பாடியுள்ளனர். ஆனால், அப்போதெல்லாம் ஆஷா போஸ்லே, சிவாஜியை சந்தித்தது இல்லை.
சிவாஜியின் பாவ மன்னிப்பு
ஒரு பாடல் ரெக்கார்டிங்கிற்காக சென்னை வந்திருந்த ஆஷா போஸ்லே சிவாஜியின் பாவ மன்னிப்பு திரைப்படத்தைப் பார்த்திருக்கிறார். அதில் சிவாஜியின் நடிப்பு இவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
இந்தத் திரைப்படம் குறித்து தனது குடும்பத்திடம் சொல்ல, அவர்கள் அனைவரும் மும்பையில் பாவ மன்னிப்பு திரைப்படத்தைப் பார்த்திருக்கின்றனர்.
தமிழ் புரியாதபோதும், சிவாஜியின் நடிப்பு ஆஷா போஸ்லே குடும்பத்தினருக்கு கண்ணீரை வரவழைத்திருக்கிறது.
இதனையடுத்து, ஒரு இசை நிறுவனத்தின் உதவி மூலம், சிவாஜியை ஆஷா போஸ்லே மற்றும் அவரின் குடும்பத்தினர் சந்தித்துள்ளனர். அந்தச் சந்திப்பில் ஆஷா போஸ்லே மற்றும் லதா மங்கேஷ்கர் இருவருமே சிவாஜியின் கைகளில் ராக்கி கட்டியுள்ளனர்.
சென்னை குடும்பத்திலிருந்து...
இந்தச் சந்திப்பு இப்படியே முடிந்துவிடாமல், நட்பு, குடும்பம் என்று இன்று ஆஷா போஸ்லே மற்றும் சிவாஜியின் குடும்பத்திற்கு உறவு தொடர்ந்து வருகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் ஆஷா போஸ்லேயின் ஒரு பிறந்தநாளுக்கு, நடிகர் விக்ரம் பிரபு, சென்னை குடும்பத்தில் இருந்து உங்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் என்று பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்திருந்தார்.
சிவாஜி உடனான தன்னுடைய உறவு குறித்து ஆஷா போஸ்லே ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்டதாவது...
"நடிகர் சிவாஜி கணேசனை என்னுடைய நண்பர் அல்லது அண்ணன் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். அவரது வீட்டிற்கு அடிக்கடி செல்வேன்.

அவர் என்னிடம் இங்கிலீஷில் பேசுவார். நான் அவரிடம் இந்தியில் பேசுவேன்.
இரவு முழுக்க இருவரும் பேசிக்கொண்டிருப்போம். அவர் என்னிடம் எப்படி நீ தமிழ் பாட்டு பாடுற? உனக்கு தமிழ் சுத்தமா தெரியலேயே? என்று கிண்டல் செய்வார்.
நான் அவரிடம் தமிழ் பாடல் பாடி காண்பிப்பேன். அவர் அதை ரசிப்பார். இருந்தாலும், உடனே, உனக்கு தமிழ் தெரியாதுதானே என்று கிண்டல் செய்வார்".
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


