நயினார், சண்முகம், பொன்ராஜ்: `இந்த ஆணின் மொழி... - சொற்களில் ஒளிந்திருக்கும் பாலின அரசியல்! | ஓவியா
(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)
அண்மைக் காலமாக மேடைப் பேச்சுகள் மீதும் பொதுவான உரையாடல்களில் பயன்படுத்தப்படும் சொற்கள் மீதான கண்டனங்களும், அதன் மீதான தொடர் அரசியலும் முகாமையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு கோணங்கள் அடங்கியிருக்கின்றன. இந்த உரைகளைத் தாண்டி அவற்றிற்குள் இருக்கும் அரசியலையும் இணைத்து பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
மனித இன தோற்றுவாய்க்கும் அதன் தொடர் பரிணாமத்திற்கும் தலைமை ஏற்று வழி நடத்திய பெண்ணினத்தை ஆண்கள் தங்களுடைய பாலின்ப தூண்டலுக்கான பொருட்களாகவும் தங்கள் பிறவிப் பணியாட்களாகவும் சுருக்கி விட்ட நிகழ்வுக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வரலாறு இருக்கிறது. அந்த வரலாற்றின் குழந்தையாக பிறந்து வளர்ந்து நிலை பெற்றிருக்கும் மொழி தான் இன்று வரை சமூகத்தின் மொழியாக நிலவி வருகிறது.
வீட்டில் ஒரு மூலையில் அடுப்படியிலும், படுக்கையறையிலும் கொல்லைப் பக்கங்களிலும் பெண்களை உட்கார வைத்துவிட்டு வெளி உலகத்திற்கு வருகின்ற ஆண்கள் தங்களுடைய உரையாடல்களில் சுவை கூட்டும் பொருட்டாகவே பெண்களைப் பொதுவெளியில் சுட்டிப் பேசி வந்திருக்கிறார்கள். (அன்று அவ்வாறு ஆண்கள் பேசி மகிழ்ந்து கொண்ட பொதுவெளிகளில் பெண்களே இல்லை. அவ்விதமே இவர்கள் படைத்து வைத்திருந்த இலக்கியங்களை பெண்கள் வாசிக்கவும் அனுமதிக்கப்படவில்லை). ஓர் ஆணின் மொழியில் பெண்கள் இரண்டு இடங்களில்தான் அல்லது இரண்டு விதங்களில்தான் இடம் பெறுகிறார்கள்.
ஒன்று அவையைக் கவர்ந்து குபீர் சிரிப்பலையைத் தோற்றுவிக்கும் நகைச்சுவை கருப்பொருட்களாக...
மற்றொன்று ஓர் ஆண் தனது ஆண்மையின் பெருமையிழந்து பெண்களைப் போல் அதாவது பெட்டைகளாக மாறி விடக் கூடாது என ஆண்மையின் தலைமையை வலியுறுத்தி விதந்தோதும் விதமாக.
இந்த சாயல் படியாத ஆணின் உரை கிட்டத் தட்ட சாத்தியமற்ற ஒன்றாகவே வரலாறு நெடுகிலும் காணக் கிடைக்கிறது. மனித இனம் தவிர்க்கவே முடியாத ஆளுமைத் தலைவர்கள் அனைவர் உரைகளிலிருந்துமே இதற்கான உதாரணங்களை நாம் காட்ட இயலும்.
“கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.”
என்ற வள்ளுவரின் வாக்கை, அதாவது அனைவரும் கேட்க விரும்பும் மொழி என்பதே பெண்ணை இழிவுபடுத்தி ஏளனப்படுத்தி பேசுவதுதான் என்றுதான் ஆண் மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
18ம் நூற்றாண்டு தொடங்கி 19ம் நூற்றாண்டில் தொடர்ந்து கருக் கொண்டு உருவம் கொண்டு பெண்ணியச் சிந்தனைகளின் விசாரணைகள் இந்த மொழி மீதான திறனாய்வை முன்னிறுத்தின. பேசுகின்ற மொழியே பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்குமேயானால் பெண்ணியச் சிந்தனைகளை மக்கள் பொதுப்புத்திக்கு எடுத்துச் செல்வது எவ்வளவு சவால் மிக்க பணியாக இருக்குமென்பதை பெண்ணியச் சிந்தனையாளர்கள் ஆழமாக உணர்ந்தார்கள்.
உலகின் ஈடு இணையற்ற பெண்விடுதலைச் சிந்தனையாளர் பெரியார் விதவை, விபச்சாரி, கைம்பெண் , மலடி ….போன்ற வார்த்தைகளுக்கு இணையான ஆண்பாற் சொற்கள் ஏன் இல்லை என்கின்ற கேள்வியை இந்தத் தமிழ்நாட்டின் பட்டி தொட்டி யெங்கும் நடைபெற்ற ஆயிரக்கணக்கான கூட்டங்களில் எழுப்பினார்.

ஆனால் இன்று வரை அரசியல் உரைகள் மட்டுமல்ல நீதிமன்ற தீர்ப்புகள் , அரசு அலுவலக கோப்புகள் , அரசு அலுவலகக் கூட்டங்கள், கார்ப்பரேட் போர்டு ரூம் அறைக் கூட்டங்கள் , கதா காலேட்பங்கள், புராண உரைகள், தன்னார்வ தன்னெழுச்சி போதனைகள் இவை அனைத்திலும் நம்மால் இந்த ஆணின் மொழியைக் காண இயலும். முதல் தலைமுறைப் பட்டதாரியாக, முதல் தலைமுறை படிப்பாளியாக, முதல் தலைமுறை பணிக்கு செல்பவராக, முதல் தலைமுறை அரசியல்வாதியாக வெளி வருகின்ற ஒவ்வொரு பெண்ணும் நேற்று மட்டுமல்ல இன்றும் கூட சந்திக்க வேண்டிய முதல் சவால் என்று ஒன்றை சொல்ல வேண்டும் என்று சொன்னால் அது இந்த ஆணின் மொழி தான்.
இந்த வரலாற்றுப் புரிதலோடு நாம் இன்றைய காட்சிகளுக்குள் வருவோம். எப்படி அறிவியலறிஞர்கள் கண்டுபிடிக்கும் அணுகுண்டுகளை பயன்படுத்துகிறவர்களாக அரசியல்வாதிகள் இருக்கிறார்களோ அப்படித்தான் பல தியாகங்களுடன் வென்றெடுக்கப் படும் உரிமை முழக்கங்களை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்வோரும் அரசியல் வாதிகளாகதான் இருக்கிறார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம்தான் விஜய் போன்ற ஒரு மசாலாப் பட வெற்றி நாயக நடிகர் பெண்ணினத்தை அவமானப் படுத்தி விட்டார்கள் என்று ஒரு மனுவோடு டிஜிபி அலுவலகம் செல்லும் காட்சி இப்போது அரங்கேறியிருப்பது.
கடந்த ஓராண்டில் பெண்களுக்கு விரோதமாகப் பேசி விட்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட , தண்டிக்கப் பட்ட பேச்சாளர்கள், சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. அத்தனையும் விரிவாகப் பேசப்படத்தான் வேண்டும். இந்தக் கட்டுரையில் சில நாட்கள் இடைவெளியில் நடைபெற்றிருக்கிற மூன்று நிகழ்வுகளை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
நயினார் நாகேந்திரன் - பாரதிய ஜனதா கட்சியின் தற்போதைய மாநிலத் தலைவர் .
அவர் நடிகரும் த.வெ.க கட்சி தலைவருமான விஜய் பற்றி பேசுகையில் விஜய் முதலில் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும், முதலில் நடிகையை(பெயர் தவிர்க்கப்படுகிறது) விட்டு அவர் வெளியே வர வேண்டும். அப்படி வெளியே வந்தால் தான் நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தெரியும். இந்த பேச்சு பெண்களை இழிவுபடுத்துகிறது என்றும் விஜய் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விமர்சனம் என்றும் கூறி கடுமையாக எதிர்க்கப் பட்டது. மேலும் இவர்களின் அரசியலுக்கே தொடர்பில்லாத நடிகை பற்றி அவர் பேசுவது தவறு என்பதும் முன்வைக்கப் பட்டது.
உண்மையில் சமூக வலைத்தளங்களில் இப்பிரச்சினை அக்கு வேறு ஆணி வேறாக அலசப் பட்டுக் கொண்டுதானிருந்தது. ஆனால் கவனிக்கத் தக்க விசயம் என்னவென்றால் இங்கு நயினார் நாகேந்திரன் அவர்கள் ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் ஆவார். அதுவும் ஆளுங் கட்சி. ஆனால் நயினார் நாகேந்திரன் மட்டுமல்ல எந்தத் தரப்பு என்கின்ற பாகுபாடுகள் இல்லாமல் பொதுவாழ்விலிருக்கும் எந்தவொரு மனிதராக இருந்தாலும் அவர்தம் தனி வாழ்க்கை பற்றிய விமர்சனத்தை இங்கு எல்லோருமே மேற்கொண்டுதான் வருகிறார்கள். மக்களாலும் அது தவறு என்று உணரப்படுவதோ உணர்த்தப் படுவதோ இல்லை. ஆனால் இந்த பேச்சை அந்த நடிகை உடனடியாக எதிர்த்து ஒரு வழக்கறிஞர் மூலமாக அறிக்கை அளித்தார்.

நாகேந்திரனின் கருத்து “அவமானகரமானதும் பொருத்தமற்றதும்” என்று அவர் கண்டித்ததுடன் அப்படியான கருத்து ஒரு உயர்நிலை அரசியல் தலைவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை என்றும் குறிப்பிட்டார். அவர் தன்னுடைய பெயரை அரசியல் விவாதத்தில் இழுத்துச் சேர்க்காமல் என் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட மரியாதை பாதுகாக்கப்படவேண்டும் எனவும்கூறினார். பொதுவெளியில் தனது தொழிலான நடிப்பு மட்டுமே தனது அடையாளமாக இருக்க முடியும் என்று அவர் தெரிவித்திருந்தார்.
உண்மையில் அந்த நடிகையின் இச்செயற்பாடு மிகுந்த வரவேற்புக்குரியது. இவருடைய உறுதியான இச்செயல் வேறு வழியின்றி நயினார் நாகேந்திரனை மன்னிப்பு கேட்க வைத்தது.
தமிழக முதல்வர் இந்நாட்டின் மாணவச் செல்வங்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். `உங்கள் கனவை என்னிடம் சொல்லுங்கள். நான் உங்கள் தகப்பனாக நின்று அவற்றை நிறைவேற்றி தருவேன் என்பதாக. சாதிக்க விரும்பும் இளைஞர்களுக்கான ஒரு அழைப்பு அது. இதற்கு அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான சி. வி. சண்முகம் அவர்கள் முதல்வரைப் பார்த்து ஒரு மகத்தான கேள்வியைக் கேட்டார்.
அது மிகக் கேவலமானது, என்னுடைய கனவில் நடிகை (பெயர் தவிர்க்கப்படுகிறது) வேண்டும் என்று நான் நினைத்தால் நீங்கள் அதற்கு ஏற்பாடு செய்வீர்களா என்று அவர் கேட்டார். வளர்ந்து வருகின்ற பெண்ணுரிமை சமூகத்தில் மட்டுமல்ல இந்த பெண்ணுரிமை சிந்தனைகளை மலராது இருந்த ஒரு சமூகத்தில் கூட இந்த பேச்சை யாரும் ஓர் நாகரீகமான பேச்சாகக் கருத முடியாது.
அவருடைய நோக்கம் திமுக அரசைத் தாக்குவது… முதல்வரைத் தாக்கி பேசுவது. ஆனால் அவர் அவமானப்படுத்திய பெண் இவருடைய கேள்விக்கும் அல்லது இந்த இவர்களுடைய இந்த அரசியலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத கலை துறையைச் சார்ந்த ஒரு நபர். அவருடைய பெயரை பயன்படுத்தி இப்படி ஒரு கேள்வியை கேட்க சமூகத்திற்கு எந்த விதமான உரிமையும் கிடையாது. உண்மையில் அந்த நடிகை அவர்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுத்திருந்தால் மிகக் கடுமையான தண்டனையை அவர் அடைந்திருப்பார். எனினும் அவர் வருத்தம் தெரிவித்ததுடன் அப்பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழுந்தது.
அண்மையிலே முன்னாள் குடியரசுத் தலைவர், அறிவியல் அறிஞர் அப்துல் கலாம் அவர்களுடைய உதவியாளராகப் பணிபுரிந்து அதன் வழியாக சமூகப் பொதுநீரோட்டத்திற்கு அறிமுகமாகி இன்றைய தினம் சமூகப் பிரச்சனைகள் குறித்த அரசியல் குறித்த கருத்து கூறுகின்ற ஒரு கருத்துரையாளராக தன்னை வளர்த்துக் கொண்டிருப்பவர் அறிவியலறிஞர் பொன்ராஜ் அவர்கள்.
பொதுவாக தொலைக்காட்சி விவாதங்களில் பரபரப்பாக பேசுவது, பிறரை சீண்டுவது போல் பேசுவது , வம்புக்கிழுத்து பேசுவது, அவதூறாக பேசுவது இது போன்று பல காட்சிகளை நாம் அன்றாடம் பார்த்து வருகின்றோம். இதில் நண்பர் பொன்ராஜ் அவர்களைப் பொறுத்தவரை தனது கருத்துக்களை தான் அறிந்தவற்றை தர்க்க ரீதியாக நாகரீகமான மொழிநடையில் எடுத்து வைக்கின்ற வரிசையில் வருபவர். அவருடைய கருத்துக்கள் ஒருவருக்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஏற்புடையதாக இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அவர் தனது கருத்துக்களை மிக நாகரீகமான மொழியிலே அவையை மதித்து உரையாடக் கூடியவர் என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது. இன்னும் சொல்லப் போனால் அவர் தீவிரமான அரசியல் நிலைப்பாடு கொண்டவருமில்லை. எனவே கடுமையான கருத்துக்கள் அவரிடமிருந்து வராது. இவ்வாறிருக்க இப்போது அவர் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டு விட்டார். தவெக கட்சியை பற்றி பேசுகின்ற பொழுது அக்கட்சியினரை அதில் குறிப்பாக அக்கட்சிப் பெண்களை விபச்சாரிகள் கூட்டம் என்று கூறினார்.

ஒரு கட்சியை ஏற்றுக் கொள்ளாத எவரும் அக்கட்சியைப் பின்பற்றுகிறவர்களையும் சேர்த்து விமர்சிக்கதான் செய்வார்கள். ஆனால் அப்பெண்களை விபசாரிகள் என்று சொன்னதுதான் இப்போது நம்மை இது குறித்து பேச வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
முதலில் விபச்சாரி என்கின்ற சொல் தடை செய்யப்பட வேண்டிய சொல் என்பதனை நாம் இங்கு அழுத்தமாகக் குறிப்பிட வேண்டும், எப்படி சாதியைச் சொல்லி இழிவு படுத்துவது குற்றம் என்று இன்று எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறதோ அதுபோல்தான் பெண்களை விபச்சாரிகள் என்று சொல்லி இழிவுபடுத்துவது தடை செய்யப்பட வேண்டிய ஒரு செயலாகும், எனவே இந்த பிரச்சனைக்குள் ஆழமாக உள்ளே போவதற்கு முன்னால் முதல் நிலையிலேயே இந்தச் சொல்லை நண்பர் பொன்ராஜ் அவர்கள் பயன்படுத்தியிருக்கக் கூடாது என்பதனை அவருக்கு நாம் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.
ஒரு அறிவியலறிஞராக தொடங்கி சமூகக் கருத்தியலாளராக தன்னை வளர்த்துக் கொண்டிருக்கும் திரு.பொன்ராஜ் அவர்கள் மனித உரிமைகள், மனித குல விடுதலை பெண்ணுரிமை ஆகிய தளங்களில் வரலாற்று ரீதியாக நிகழ்ந்து கொண்டிருப்பவற்றை உள்வாங்கி இந்த இடத்தில் விபச்சாரி என்கிற சொல்லை பயன்படுத்தியது ஏன் தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏன் இதை சொல்லுகிறேன் என்றால் அந்த வார்த்தையை பின் வாங்கிக் கொள்ள அவர் கடுமையாக மறுப்பு தெரிவித்தார். அவருடைய கோபம் வேறு. அவர் குறிப்பிடும் விசயங்களுக்கு நான் வருகிறேன். ஆனால் அதற்கு முன்னதாக சமூகக் கருத்துரையாளர்களாக, அரசியல்வாதிகளாக, பொது மனிதர்களாக தங்களை முன்னிறுத்தக்கூடிய யாரும் இச்சொல்லை பயன்படுத்துவது தவறுதான் என்பதனை நண்பர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன்
அடுத்தபடியாக நயினார் நாகேந்திரனாக இருக்கட்டும், சிவி சண்முகமாக இருக்கட்டும், அவர்கள் உரை வெளிப்படையாக பெண்களை ஒரு போகப் பொருளாக பார்க்கின்ற அவர்களுடைய சொந்த மதிப்பீட்டை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. மேலும் அக்கூற்றுக்கள் நான் இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் கூறியுள்ள ஆண்களின் மனநிலையை (பெண்களைப் பற்றி பேசி கூட்டத்தை உற்சாகப்படுத்துவது. அதாவது தங்கள் உரைகளின் வெற்றிக்காக பாலியல் இன்பப் பொருட்களாகப் பெண்ணை நினைவூட்டுவது) வெளிப்படுத்துபவை.
ஆனால் நண்பர் பொன்ராஜ் முன்னவர்கள் போல் எள்ளல் ஏளனத்திலிருந்து இக்கூற்றுக்களைப
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


