பீகார்: திடீரென விவசாயியின் வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ.10 கோடி; என்ன நடந்தது?
பீகாரில் மாநிலம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள தேவ்கஞ்ச் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ரிதா. விவசாயி மனைவியான ரிதா எப்போதாவதுதான் வங்கி பக்கமே செல்வார். சமீபத்தில் தனது வங்கிக் கணக்கில் பணம் எடுக்க உள்ளூர் வங்கிக்குச் சென்றார். ஆனால் அங்கு வங்கி மூடப்பட்டு இருந்தது. இதனால் வங்கிக்கு வெளியில் இருந்த ஏ.டி.எம். மூலம் பணம் எடுக்கலாம் என்று சென்றார்.
அவர் தனது வங்கிக்கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்தபோது அதிர்ச்சியாகிவிட்டார். வங்கிக்கணக்கில் ரூ.9,99,49,588 இருப்பதாகக் காட்டியது.
அதனை நம்ப முடியாமல் வேறு ஒரு ஏ.டி.எம்மிற்குச் சென்று மீண்டும் ஒரு முறை எவ்வளவு பணம் இருக்கிறது என்று பார்த்தார். அப்போதும் அதே தொகையைத்தான் காட்டியது. இதையடுத்து இது குறித்து தனது குடும்பத்தில் உள்ளவர்களிடம் ரிதா தெரிவித்தார். குடும்பத்தில் சிலர் பணத்தை எடுத்துவிடலாம் என்று ஆலோசனை வழங்கினர்.
ஆனால் பணம் எப்படி தனது வங்கிக் கணக்கிற்கு வந்தது என்று தெரியாமல் அந்தப் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட எடுத்து செலவு செய்ய மாட்டேன் என்று ரிதா திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். அதோடு ரிதாவும், அவரது குடும்பத்தினரும் இது குறித்து வங்கியில் தெரிவிக்கலாம் என்று நினைத்தனர். ஆனால் வங்கி விடுமுறையால் மூடப்பட்டு இருந்தது.
இதையடுத்து வங்கி திறக்கப்பட்டபோது வங்கிக் கணக்கில் பணம் வந்திருப்பது குறித்து ரிதா தெரிவித்தார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்தத் தவறு நடந்திருக்கலாம் என்று வங்கி மேலாளர் ரிஷ்காந்த் தெரிவித்தார்.
அதோடு அவரது வங்கிக்கணக்கில் இருந்த பணம் திரும்ப எடுக்கப்பட்டது. தனக்கு வந்த பணத்தைச் செலவு செய்யாத ரிதாவின் செயலை வெகுவாகப் பாராட்டினர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
