`தம்பி மாதிரி பார்த்தேன்; இப்படி ஏமாத்துவான்னு நினைச்சுக்கூட பார்க்கலை! - பிக்பாஸ் தாமரை செல்வி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் தொடரின் ஹீரோயின் ஸ்வேதாவுக்கும் அவர் கணவர் ஆதிக்கும் இடையிலான விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் இருக்கிற சூழலில், ஆதி மீது பண மோசடிப் புகார் கொடுத்திருக்கிறார் நடிகையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருமான தாமரைச் செல்வி. இவர் சின்ன மருமகள் தொடரில் ஸ்வேதாவுடன் நடித்திருந்தவர்.

இது தொடர்பாக தாமரையிடம் பேசினோம்.

ஸ்வேதா

``ஸ்வேதாவும் நானும் ஒரே சீரியல்ல நடிச்சோம். அந்தப் பையன் அவங்களுக்கு எப்படி அறிமுகமானானோ தெரியாது, அவங்களோட கணவராதான் எனக்கு அறிமுகமானான். நான், என் வீட்டுக்காரர் அவங்க ரெண்டு பேர்னு நாங்க ஜோடியா நிறைய இடங்களுக்கு டூர்லாம் போயிருக்கோம்.

திடீர்னு அவங்களுக்கிடையில் என்ன பிரச்னைனு தெரியல, ஆதி எங்கிட்ட வந்து அழுதான்.

என் வீட்டுக்காரர்கூட அவங்க ஃபேமிலி பிரச்னை, நாம தலையிட வேண்டாம்னு சொன்னார். நாந்தான் மனசு கேக்காம, இவனுக்காக ஸ்வேதா வீட்ல பேசினேன்.

ஆனா அதுக்குள்ள அவங்களுக்கிடையிலான பிரச்னை முத்திடுச்சு. ஒருத்தருக்கொருத்தர் வழக்கு விவாகரத்துன்னு விவகாரம் அடுத்தகட்டத்துக்குப் போயிட்டதால‌, ஒரு கட்டத்துக்கு மேல என்னாலும் அதுல தலையிட முடியல.

இவனுடைய எல்லா பொருள்களையும் பறிச்சுகிட்டு, வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டதாச் சொல்லி எங்கிட்ட வந்து அழுதான். அப்பவும் நாங்க எங்க வீட்ல தங்க அனுமதிச்சோம்.

லேப் டாப் மாதிரியான சில பொருள்களை வாங்க பண உதவி செய்தோம். பணமாகவே கொஞ்சம் கொஞ்சமா ஏழு லட்சம் வரை வாங்கியிருக்கான்.

பண மோசடி

ஆர்ட்டிஸ்ட்களுக்கு புரமோஷன் செய்து தர்ற வேலைதான் பார்க்குறேன்னு சொன்னான். வேலை கொஞ்சம் பிக் அப் ஆனதும் காசு வந்திடும், உங்க பணத்தை திருப்பித் தந்திடுறேன்னு சொல்லியே திரும்ப திரும்ப கடன் வாங்கினான்.

ஒரு கட்டத்துல எனக்கே பணக்கஷ்டம் வந்திச்சு. அந்தச் சூழல்ல ஒரு நாள் திடீரென வந்து அவசரமா பணம் கேட்டு அழுதான். பணம் இல்லைன்னாலும் கேக்கலை. தனக்கு ஒரு பெரிய வாய்ப்பு வந்திருக்கு, கொஞ்சம் முதல் போடணும், இந்த ஒரு முறை உதவி செய்யுங்கன்னு நின்னான்.

வேறு வழி இல்லாம என்னுடைய மூணு சவரன் நகைகளை அடகு வச்சு பணம் கொடுத்தேன்.. அப்ப நான் செய்த ஒரேயொரு தப்பு அவன் பேரில் அடகு வச்சதுதான்.

உள்ளூர் அடையாள அட்டை வேணும்னு கேட்டதால அவன் பெயரில் வைக்க சம்மதிச்சேன்.

ஆனா அடகு வச்ச பத்தாவது நாள் எனக்கே தெரியாம நகையை மீட்டு வித்துட்டான். அதோட சரி, அதன் பிறகு என் நம்பரை பிளாக் செய்துட்டு எஸ்கேப் ஆகிட்டான். என்னைப் போலவே பலரிடம் ஏற்கெனவே ஏமாத்தியிருக்கான்னு அதுக்குப் பிறகுதான் தெரிஞ்சுகிட்டேன்.

தம்பி மாதிரி நினைச்சு உதவுனேன். நம்பிக்கை மோசடி பண்ணிட்டான்.

இப்ப போலீஸ்ல புகார் தந்திருக்கேன் என்கிறார் இவர்.

ஸ்வேதாவுமே சில தினங்களுக்கு முன் ஆதிக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போதே விகடன் தளத்தில் இது தொடர்பாக செய்தியும் வெளியிட்டிருந்தோம்.

தாமரையின் புகாரையடுத்து ஸ்வேதாவை நாம் தொடர்பு கொண்ட போது,

நானே ரொம்ப மன உளைசல்ல இருக்கேன். அது தொடர்பாக நான் எதையும் பேச விரும்பலைங்க என மறுத்து விட்டார் அவர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.