Karuppu: கருப்பு படத்தின் கதை முதலில் விஜய்காக எழுதப்பட்டதா? - ஆர்.ஜே. பாலாஜி கொடுத்த பதில் என்ன?

ஆர்.ஜே. இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கருப்பு திரைப்படம் மே 14-ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தில் த்ரிஷா, நட்டி, ஸ்வாசிகா எனப் பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களிலிருந்து காட் மோட் பாடல் முதல் சிங்கிளாக சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார்கள்.

தற்போது கருப்பு திரைப்படம் குறித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு ஆர்.ஜே. பாலாஜி பேட்டியளித்திருக்கிறார்.

சூர்யா - கருப்பு திரைப்படம்

அந்தப் பேட்டியில் ஆர்.ஜே. பாலாஜி, "நான் கருப்பு படத்தின் கதையை 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் எழுதத் தொடங்கினேன். ஐடியா பெரிதாகி, மிகவும் எக்ஸைட்டிங்காக மாறியதால், இந்தப் படத்துக்கு ஒரு ஸ்டார் தேவை என்று தோன்றியது. அந்த இடத்தில் விஜய் சார் இருந்தால் அருமையாக இருக்கும் என்று நினைத்தேன்.

2021-22-ல், அவர் என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் கேட்டிருந்தார். நான் அப்போது அவரிடம் ஒரு கதை சொன்னேன். அதைக் கேட்ட பிறகு, இது ரொம்ப பெரியது. இதை இப்போதே எப்படி தொடங்க முடியும்? உடனடியாகத் தொடங்கிடலாமா? என்று கேட்டார்.

நான் என் சொந்த படத்திற்குக்கூட அவசரப்பட மாட்டேன். விஜய் சார் படத்திற்கான வேலை என்றால் இன்னும் அதிக நேரம் எடுத்துக்கொள்வேன் என்று கூறி அந்த வாய்ப்பை விட்டுவிட்டேன்.

விஜய் சாருக்கு என் ஐடியா பிடித்திருந்தது. அது ஒரு பெரிய ஐடியா என்று அவர் உணர்ந்தார்.

விஜய் சார் என் ஸ்டைலில் ஏதாவது வேண்டும் என்று சொன்னார். LKG, மூக்குத்தி அம்மன் படங்களைப் போல இருக்க வேண்டும் என அவர் விரும்பினார். இந்தக் கதையில் (கருப்பு கதையில்) அப்படியான விஷயங்கள் இருக்கின்றன.

அதே சமயம் இந்தக் கதையில் பெரிய ஸ்டாருக்கு ஏற்ற விஷயங்களும் இருந்தன. அவருக்கும் அவை பிடித்திருந்தன. ஆனால் அப்போதுதான் அவர் அரசியலுக்கு வந்தார். அதனால் அது நடக்கவில்லை. பிறகு அதே கதையை சூர்யா சாரிடம் சொன்னேன்.

ஆர்.ஜே பாலாஜி
ஆர்.ஜே பாலாஜி

அவர் ஒப்புக்கொண்ட பிறகு, அவருக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்தேன். சூர்யா சார் என்னை 200% நம்பினார்.

நான் எதைச் சொன்னாலும் கேள்வி கேட்காமல் செய்தார். அவர் என்மீது வைத்த நம்பிக்கையும், எனக்குத் தந்த சுதந்திரமும் என் பொறுப்பை இரட்டிப்பாக்கியது" என்றவர், "மூக்குத்தி அம்மன் 2 பற்றி சொன்னால், நான் ஒருபோதும் என் படங்களுக்கு சீக்வல் செய்ய நினைத்ததில்லை.

ஆனால், படத்தின் தயாரிப்பாளர்கள் இரண்டாம் பாகம் செய்வதற்கு முடிவெடுத்திருக்கிறார்கள். சுந்தர் சி, நயன்தாரா, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் என எல்லோரும் என்னிடம் பேசினார்கள். அவர்களின் புரொடக்ஷன் என்பதால் அந்த டைட்டலை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். ஆனால் அது முற்றிலும் வேறு படம்" எனக் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.