சோர்ந்த மனதால் வாழ்க்கையைக் கட்டி எழுப்ப முடியாது - பெண்கள் தின விழாவில் மனநல ஆசோகர் காந்தி

அறிவுப் பகிர்வு, தொழில்முனைவு மற்றும் பெண் ஆளுமைகளைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் மேஜிக் 20 தமிழ் (Magic 20 Tamil) தளத்தின் சார்பில், பெண் தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோர்களைக் கொண்டாடும் மேஜிக் பெண்கள் (Magic Pengal), நிகழ்ச்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெண் தொழில்முனைவோர், முதலீட்டாளர்கள், வல்லுநர்கள், படைப்பாளர்கள் மற்றும் வருங்கால நிறுவனர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

மேஜிக் பெண்கள் நிகழ்ச்சி

நிகழ்ச்சியில் பேசிய தி வெல்த் கம்பெனியின் நிறுவனர் மது லுனாவத், நிதித் துறையில் ஒரு நிறுவனத்தைக் கட்டியெழுப்பிய தனது பயணம் மற்றும் ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் இத்துறையில் எதிர்கொண்ட சவால்களைப் பகிர்ந்துகொண்டார்.

அசாமில் பிறந்த அவர், குடும்பத்தில் முதன்முதலாக கல்வி கற்ற பெண்ணாக உருவெடுத்தது தொடங்கி, இன்போசிஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

"எனது 56 வயதில் என் அம்மாவுக்கு வீடு கட்டிக் கொடுத்தேன். பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் அவசியம்.

பண விஷயங்களில் ஒழுக்கம், தெளிவு மற்றும் தொடர்ச்சியான முதலீடு அவசியம். ஒரு முயற்சியில் வெற்றி பெறுவது என்பது 90 சதவிகிதம் மனநிலையில்தான் இருக்கிறது. நம்முடைய தனிப்பட்ட விஷயங்களிலும், தொழில் சார்ந்த விஷயங்களிலும் சரியான எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும்.

நம்முடைய நேரத்தையும் ஆற்றலையும் யாருக்காகச் செலவழிக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். வெற்றி என்பது சௌகரியத்தில் இருந்து வருவதில்லை. நாள்தோறும் எடுக்கும் தொடர் முயற்சியில் இருந்தே வருகிறது" என்றார்.

மேஜிக் பெண்கள் நிகழ்ச்சி
மேஜிக் பெண்கள் நிகழ்ச்சி

அரசியல் செயற்பாட்டாளர் மதிவதனி, "அரசியல் என்பது நமது வாழ்க்கைக்கு வெளியே இருக்கும் ஒன்றல்ல. அது தினசரி தேர்வுகளுக்குள் உள்ளது. திருமணம் முதல் உணவு வரை, இல்லத் தொழில்கள் முதல் வேலை வாய்ப்புகள் வரை, பெண்களின் வாழ்க்கையில் அரசியல் தாக்கம் உள்ளது. முடிவெடுக்கும் இடங்களுக்கு பெண்கள் முன்னேற வேண்டும். பெண்கள் அந்த இடங்களை நிரப்பவில்லை என்றால், அந்த இடங்கள் அவர்களின்றி நிரப்பப்படும்” என்றார்.

மனநல ஆலோசகர் காந்தினி பேசுகையில், "மனிதர்கள் அனைத்தையும் செய்யும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்வதில் தவறில்லை. பொறுப்புகளைப் பகிரும்போது குற்ற உணர்ச்சிக்கு ஆளாக வேண்டிய அவசியம் இல்லை. எப்போதும் பிஸியாக இருப்பது மட்டுமே உற்பத்தித் திறன் ஆகாது.

சரியான ஓய்வு எடுப்பதும் அவசியம். பிறருடன் நம்மை ஒப்பிடுவதற்குப் பதில் சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். சோர்ந்த நிலையில் இருக்கும் மனதால் வலுவான வாழ்க்கையைக் கட்டியெழுப்ப முடியாது” என்றார்.

மேஜிக் பெண்கள் நிகழ்ச்சி
மேஜிக் பெண்கள் நிகழ்ச்சி

ஊடகத் துறை சார்ந்த கலந்துரையாடலில் ரேடியோ தொகுப்பாளர் சிவசங்கரி, செய்தியாளர் திலகவதி, மீடியா மேன்ஷன்ஸ் நிறுவனர் ரவூபா, பத்திரிகையாளர் இந்துஜா ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். முதலீட்டாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடலில் அனிகட் கேபிடல் நிறுவனத்தின் சீனியர் அசோசியேட் அன்கிதா, பிரணா வெஞ்சர்ஸ் நிறுவனத்தின் மேனேஜிங் பார்ட்னர் அனுராதா ராமச்சந்திரன், எழுத்தாலர் கயல்விழி கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நேச்சுரல்ஸின் இணை நிறுவனர் சி.கே.குமரவேல், அஸ்வதி ஹாட் சிப்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இளவரசி பி.ஜெயகாந்த் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.