T20 World Cup: `மீண்டும் டீ கப் புகைப்படம் - வருண் சக்ரவர்த்தியின் இன்ஸ்டா பதிவு வைரல்!

2026 T20 உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய பிறகு, வருண் சக்ரவர்த்தி மீண்டும் நகைச்சுவையாக ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

T20 உலகக் கோப்பையை இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக 96 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் இந்தியா தனது T20 உலகக் கோப்பை பட்டத்தைத் தக்க வைத்தோடு, மூன்று முறை கோப்பையை வென்ற முதல் அணியாகவும் ஆனது.

இந்த வெற்றிக்குப் பிறகு, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் ஒரு நகைச்சுவையான புகைப்படத்தைப் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தில், அவர் ஒரு கையில் கோப்பையைப் பிடித்தபடி, மறுகையில் கப்பில் இருந்து டீ குடித்துக் கொண்டிருப்பது போல இருந்தது.

வருண் சக்ரவர்த்தி

இவரின் இந்தப் பதிவு வைரலான நிலையில், ரசிகர்கள் அதில் பல நகைச்சுவையான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்கு முன்பு, இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியா கோப்பை 2025-ஐ வென்றபோது, வருண் சக்ரவர்த்தி இதுபோன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

அந்தப் போட்டியில் இந்திய வீரர்கள் PCB தலைவர் மற்றும் ஆசியா கோப்பை கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற மறுத்ததால், அவர்கள் கோப்பையை எடுத்துக்கொள்ளாமல் திரும்பியிருந்தனர்.

அடுத்த நாள், சக்ரவர்த்தி தனது படுக்கையில் படுத்துக்கொண்டிருக்கும் போது அருகில் ஒரு டீ கப் வைத்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டார். அப்போதும் அந்தப் புகைப்படம் வைரலானது.

பின்னர் ஒரு நேர்காணலில், வருண் சக்ரவர்த்தி கூறுகையில், முதலில் கோப்பையைத் தனது படுக்கையின் அருகில் வைத்து கொண்டாடும் புகைப்படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் கோப்பை இல்லாததால், அதற்குப் பதிலாக ஒரு கப்புடன் அந்தத் தருணத்தை உருவாக்க முடிவு செய்தேன் எனத் தெரிவித்திருந்தார்.

அதை இந்திய ரசிகர்கள் பகிர்ந்து, நகைச்சுவையாக கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.