நீங்கள் இதற்காக வந்தால் என்னால் வரமுடியாது; நான் பிஸி - முர்முவிற்கு தங்கை மம்தா பதில்

நேற்றும், இன்றும் மேற்கு வங்கத்தில் 9-வது சர்வதேச சந்தாலி மாநாடு நடக்கிறது.

இந்தியாவின் ஜார்காண்ட், ஒடிசா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மாநிலங்களில் சந்தால் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களது கலாச்சாரம், மொழி மற்றும் உரிமையை பாதுகாக்கும், கொண்டாடும் நோக்கமே இந்தச் சர்வதேச மாநாடு.

இந்த மாநாட்டில் நேற்று இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

முதலில் இந்த நிகழ்வு மேற்கு வங்கத்தில் உள்ள பன்சிதேவாவின் பிதான்நகரில் நடக்க இருந்தது. இந்த இடத்தில் கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் கூடலாம்.

ஆனால், கடைசி நேரத்தில், மேற்கு வங்க அரசு இந்த நிகழ்வை கோஷய்பூருக்கு மாற்றியிருக்கிறது. அது மிகவும் குறுகலான பகுதி. அங்கே அதிக மக்களும் கூட முடியாது.

கடைசி நேரத்தில் இடம் மாற்றப்பட்டதால் மாநாட்டில் அதிக மக்கள் கலந்துகொள்ளவில்லை.

மேலும் திரௌபதி முர்முவை வரவேற்க அந்த மாநிலத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அமைச்சர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை.

இதனால், தனது அதிருப்தியை பொதுவெளியிலேயே தெரிவித்திருந்தார் முர்மு...

"மம்தா பானர்ஜி எனது தங்கையைப் போன்றவர். நானும் மேற்கு வங்கத்தின் மகள் தான்.

ஆனால், என்னை ஏன் இங்கு வர அனுமதிக்கவில்லை என்று எனக்கு தெரியவில்லை.

அவர் அதிருப்தியாக இருக்கிறாரா என்பது தெரியவில்லை. அதனால் தான், இடம் மாற்றப்பட்டதா?

பொதுவாக, ஜனாதிபதியை வரவேற்க முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் வர வேண்டும். ஆனால், அவர்கள் வரவில்லை.

சமீபத்தில் தான் இங்கே ஆளுநர் மாற்றப்பட்டிருக்கிறார். அதனால் அவரால் வரமுடியவில்லை என்பது புரிகிறது" என்று பேசியிருந்தார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் இந்தச் செயலை பாஜக, அரசியலமைப்பு ஒழுக்கத்தின் முழுமையான சரிவு என்று விமர்சித்துள்ளது.

பிரதமர் மோடியும், இந்தச் செயல் அவமானகரமானது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த விமர்சனங்களுக்கு தற்போது பதிலளித்துள்ளார் மம்தா பானர்ஜி. அவர் கூறியுள்ளதாவது...

"ஜனாதிபதி திரௌபதி முர்முவின் பெயரை பயன்படுத்தி பாஜக மாநிலத்தின் மீது அவதூறு பரப்புகிறது" என்றும், முர்முவிற்கு பதிலளிக்கும் விதமாக, "நீங்கள் ஆண்டுக்கு ஒருமுறை வந்தால் நான் உங்களை வரவேற்பேன்.

ஆனால், தேர்தல் சமயத்தில் வந்தால், உங்களது நிகழ்வுகளில் என்னால் கலந்துகொள்ள முடியாது.

ஏனெனில், நான் மக்கள் உரிமையில் பிஸியாக உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.