ஆரம்ப நாட்களிலிருந்தே அவரது வளர்ச்சியை நான் கவனித்து வருகிறேன்- சஞ்சுவை பாராட்டிய சசி தரூர்

நேற்று முன் தினம் (மார்ச்.1) நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் 97 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு சஞ்சு சாம்சன் முக்கிய பங்காற்றியிருந்தார். சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தை பலரும் பாராட்டியிருந்தனர்.

சஞ்சு சாம்சன்

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் சஞ்சு சாம்சனை பாராட்டி இருக்கிறார். " சஞ்சு சாம்சனுக்கு 14 வயது இருக்கும் போதிலிருந்தே எனக்குத் தெரியும்.

திருவனந்தபுரத்தில் அவர் விளையாடிய ஆரம்ப நாட்களிலிருந்தே அவரது வளர்ச்சியை நான் கவனித்து வருகிறேன்.

அவரது தொகுதி எம்.பி என்ற முறையிலும், ஒரு தீவிர ரசிகராகவும் அவர் இந்திய அணிக்காக விளையாடுவதைப் பார்ப்பதில் எனக்குப் பெருமிதம் உண்டு.

சஞ்சு எடுத்த 97 ரன்கள் அவரது வாழ்நாளின் மிகச்சிறந்த இன்னிங்ஸ் என்று சொல்லலாம்.

தொடக்கத்திலிருந்தே எந்தவிதமான தடுமாற்றமும் இல்லாமல் நேர்த்தியாக விளையாடினார்.

சசி தரூர்
சசி தரூர்

ஒரு சிலர் அணியில் இடம்பெற பேட்டிங் இடத்தை மாற்றிக்கொண்டே இருந்ததால் அவரது திறமையை வெளிகாட்ட அவருக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

வாழ்வா - சாவா போட்டியில் அர்ஜூனன் இலக்கை குறிவைப்பது போல தளராமல் தன் ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகிற்கு அவர் யார் என்று நிரூபித்து காட்டியிருக்கிறார்" என சஞ்சு சாம்சனை, சசி தரூர் புகழ்ந்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.