செந்தில் பாலாஜி அனுபவித்த தொல்லைகளைப் போல வேறு யாரும் அனுபவித்ததில்லை! - கோவையில் ஸ்டாலின்
என் வாக்குச் சாவடி.. வெற்றி வாக்குச்சாவடி என்ற பெயரில் தி.மு.க வாக்குச்சாவடி முகவர்களுக்கான மேற்கு மண்டல மாநாடு கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் நடைபெற்றது. தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்திய தி.மு.க தலைவர் ஸ்டாலின், செந்தில் பாலாஜி குறித்து பேசுகையில், " செந்தில் பாலாஜி அவர்களுக்கு ஒன்றிய பா.ஜ.க அரசு கொடுத்த குடைச்சலைப் பார்க்கும் போதே தெரிகிறது எந்த அளவிற்கு எதிராளிகளுக்கு அவர் சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்பது.
செந்தில் பாலாஜி அனுபவித்த தொல்லைகளைப் போல வேறு யாரும் அனுபவிக்கவில்லை. ஆனாலும் , யாருக்கும் அடிபணியாமல், தலை வணங்காமல் கடைசி வரை நெஞ்சுரத்துடன் தைரியமாக எதிர்கொண்டார். கட்சிக்கும் தலைமைக்கும் உண்மையாக உழைத்து வருகிறார் செந்தில் பாலாஜி.

டெல்லி முதல்வராக இருந்த கெஜ்ரிவால் மீது பொய்வழக்கு போட்டு சிறையில் அடைத்தது பா.ஜ.க அரசு. அந்த வழக்கில் எந்தவித முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் அவரை விடுவித்திருக்கிறது. தங்களின் ஏவல் அமைப்புகளை வைத்து அதே ஃபார்முலாவை தமிழ்நாட்டிலும் செய்ய பார்க்கிறார்கள். அவர்களின் மிரட்டல் அரட்டலுக்கு அஞ்ச நாங்கள் அடிமையும் இல்லை கோழையும் இல்லை. தைரியமாக எதிர்கொள்வோம் " என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

