தூத்துக்குடி: மாணவரை சாதி ரீதியாக தாக்கிய 5 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில், முதலூர் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகிறார்கள்.

இப்பள்ளியில் அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் பதினோராம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கும் மற்றொரு பகுதியைச் சேர்ந்த 5 மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது 5 மாணவர்கள் அந்த மாணவரை சாதி ரீதியாகப் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த மாணவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் தாக்கிய 5 மாணவர்கள் மீதும் ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி தட்டார்மடம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சாத்தான்குளம்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் குறித்து வி.சி.க தலைவர் திருமாவளவனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாதிக்கபப்ட்ட மாணவரின் தாயாரிடம் திருமாவளவன் வீடியோ காலில் பேசினார், அப்போது கண்ணீர் மல்க பேசிய மாணவனின் தாய், ” என்னுடைய மகன் தாக்கப்பட்டு புகார் அளித்தும் காவல்துறை மற்றும் பள்ளி நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நான் கஷ்டப்பட்டு கூலி வேலை செய்துதான் என்னுடைய இரண்டு பிள்ளைகளையும் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறேன்.

ஆனால், இப்படி ஒரு கொடுமை நடக்கிறது. பள்ளியில் என்னுடைய மகன் மூக்கில் இருந்து ரத்தம் வரும் வரை சக மாணவர்கள் தாக்கியுள்ளனர். ஆனால், எனக்கு தகவல் தெரிவிக்கவில்லை. பள்ளியில் இருக்க வைத்து மாலைதான் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எந்த மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்பட்டான். இதனால் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என் மகனுக்கு பாதுகாப்பு வேண்டும்” எனப் பேசினார். அவருக்கு ஆறுதல் கூறிய அவர், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட எஸ்.பியிடம் பேசுவதாகக் கூறியுள்ளார்.

தட்டார்மடம் காவல் நிலையம்

இது குறித்து மாவட்ட எஸ்.பி., மதனிடம் பேசினோம், ”பள்ளியில் சக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவரை சக மாணர்கள் 5 பேர் தாக்கியதில் அவர் காயமடைந்துள்ளார். அந்த மாணவரின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில்  தாக்குதலில் ஈடுபட்ட சக மாணவர்கள் 5 பேர் மீது தட்டார்மடம் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, முதல் கட்ட விசாரணை நடந்து வருகிறது” என்றார்.   

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.