`அவர் காத்த மலைகள் அவர் புகழைச் சொல்லும் - நம்பிக்கை விருதுகள் விழாவில் ஜகபர் அலியின் மனைவி!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தைச் சேர்ந்த ஜகபர் அலி. தனது பகுதியில் சட்டவிரோதமாக மலைகளைச் சிதைத்த குவாரி மாஃபியாக்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் போராடியவர். இயற்கை வளங்களைக் காக்கப் போராடிய இவரை, 2025, ஜனவரி 17 அன்று மணல் மாஃபியாக்கள் கொடூரமாகக் கொலைசெய்தனர். 15 ஆண்டுக்கால சமூகப் போராட்டத்துக்குப் பிறகு தன் இன்னுயிரையே ஈந்த இந்த வீரத்தியாகியின் நினைவாக, ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2025-ன் `டாப் 10 மனிதர்’ பிரிவில், `உயிர் கொடுத்து மலை காத்தவர்’ விருது வழங்கப்பட்டது.
விருதைப் பெற்றுக்கொண்ட ஜகபர் அலியின் மனைவி கண்ணீர்மல்கப் பேசினார். அப்போது, "சின்னச் சின்ன உதவிகளை மக்களுக்குச் செய்துகொண்டு, சாதாரண வருமானத்தில் எங்களை அவர் பார்த்துக்கொண்டார். ஆனால், மலைகளையும் ஆறுகளையும் திருடுபவர்களைப் பார்த்தால் அவரால் சகித்துக்கொள்ள முடியாது.
நீங்க போனா ஆபத்து என்று நான் தடுத்தபோதெல்லாம், இப்படித் திருட்டு நடந்தால் நாளைக்கு நம் பிள்ளைங்க எங்கே வாழும்? என்று கேட்டுவிட்டுப் போவார். மிரட்டல் வந்தபோதுகூட அவர் பணியவில்லை. இன்று அவர் இல்லை என்றாலும், அவர் காத்த மலைகள் அவர் புகழைச் சொல்லும்" என்று நெகிழ்ந்தார்.
இந்த விருதை வழங்கிய சகாயம் ஐ.ஏ.எஸ்., "கலெக்டர்களாகிய நாங்கள் செய்யவேண்டிய கடமையைத் தனிமனிதனாக ஜகபர் அலி செய்திருக்கிறார்.
குடியால் உயிரிழந்தவர்களுக்குக்கூட ஆதரவு காட்டும் இந்த அரசு, 1,000 கோடி ரூபாய் இயற்கை வளங்களைக் காக்கத் துணிந்த ஒரு மனிதனைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்பது வேதனைக்குரியது. ஒரு பொறுப்பற்ற சமூகத்தில் தனிமனிதனாகப் போராடி உயிர்நீத்த இவரை நான் மாமனிதர் என்பேன். என் சொந்த ஊரான திருமயத்துக்கு அருகே நடந்த இந்த இழப்பு என் மனதைப் பிழிகிறது. இந்த வீரக் குடும்பத்துக்கு எங்களது இளைஞர் படை என்றும் துணையாக இருக்கும்" என்றார்.

மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


