கேரளாவில் வீடு புகுந்து 50 சவரன் தங்கநகைகள் கொள்ளை; நெல்லை இளைஞர்கள் சிக்கியது எப்படி?!

கேரள மாநிலம், பந்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டில் கடந்த 21-ம் தேதி மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்கநகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். அவற்றின் மதிப்பு சுமார் ரூ.60 லட்சம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பந்தளம் காவல் நிலைய போலீஸார், வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர்.

தங்கநகைகள் கொள்ளை

அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா  பதிவுகளை ஆய்வு செய்த போலீஸார், செல்போன் சிக்னல் மூலம் துப்பு துலக்கினர். இக்கொள்ளைச் சம்பவத்தில் நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடியைச் சேர்ந்த இசக்கிரமேஷ், காவல்கிணற்றைச் சேர்ந்த கணேஷ் ஆகியோர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பந்தளம் போலீஸார் இருவரையும் கண்காணித்து வந்தனர்.

 இந்த நிலையில், அவரவர் ஊர்களில் பதுங்கியிருந்த இருவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் கேரளாவிற்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது எப்படி எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தங்கநகைகள் கொள்ளை

இந்த கொள்ளைச் சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? எனவும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடக மாநிலம், உடுப்பியில் நடந்த கொள்ளைச் சம்பவத்திலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. கேரளாவில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் நெல்லையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.  

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.