கேரளா: ஒரு வயது குழந்தை அடித்துக் கொலை; நாடகமாடிய தந்தை சிக்கியது எப்படி? விசாரணையில் பகீர் தகவல்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யாற்றின்கரை பகுதியைச் சேர்ந்தவர் சிஜில். மைக் செட் ஆப்பரேட்டர் வேலை செய்து வந்தார். இவருக்கும் கிருஷ்ணபிரியா என்பவருக்கும் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ஒரு வயதான இகான் என்ற மகன் இருந்தான். கடந்த 16-ம் தேதி மாலை குழந்தை இகான் வாயில் நுரை வெளிப்பட்ட நிலையில் மயங்கினான். இதை அடுத்து பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இகான் மரணமடைந்தான்.

இகானின் தந்தை சிஜில் மாலை நேரத்தில் பிஸ்கட் கொடுத்த பிறகுதான் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். மீதமுள்ள பிஸ்கட்டை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அதில் விஷத்தன்மை இல்லை என்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. குழந்தையின் வயிற்றில் படுகாயத்தால் சிதைவு ஏற்பட்டு ரத்தக்கசிவு காரணமாக குழந்தை மரணமடைந்துள்ளதாகப் பிரேதப் பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தெரியவந்தது. குழந்தையின் வயிற்றில் யார் தாக்கியிருப்பார்கள் என்ற சந்தேகத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

கைது செய்யப்பட்ட சிஜின்

அதில், குழந்தையின் பெற்றோருக்கு இடையே அவ்வப்போது பிரச்னை ஏற்படுவது வழக்கம் என அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தையின் தாயிடமும், தந்தையிடமும் தனித்தனியாகவும், சேர்த்து வைத்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அதில், குழந்தையை தந்தையே அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து குழந்தை கொலை செய்யப்பட்டதாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சிஜிலைக் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது, "சிஜிலுக்குத் திருமணம் நடந்தபோது அவரது மனைவி கிருஷ்ணபிரியாவுக்கு அவரது பெற்றோர் 8 செண்ட் நிலத்தை எழுதிக் கொடுத்துள்ளனர். அந்த நிலத்தை விற்று பணம் தரவேண்டும் எனக் கூறி தனது மனைவியைத் துன்புறுத்தி வந்திருக்கிறார் சிஜில்.

கொலை செய்யப்பட்ட குழந்தை
கொலை செய்யப்பட்ட குழந்தை

சிஜிலின் மனைவி கிருஷ்ணபிரியா கர்ப்பமானது முதல் அவர்களுக்கிடையேயான தகராறு அதிகரித்தது. குழந்தை பிறந்த பிறகு, அது தனது குழந்தை அல்ல எனச் சந்தேகத்துடன் கூறி மனைவியைத் தாக்கிவந்தார் சிஜில். சம்பவத்தன்று இரவு சிஜில் அவரது மனைவியுடன் நெருக்கமாக இருந்த சமயத்தில் திடீரென குழந்தை கண்விழித்து அழுதது.

இதனால் எரிச்சலடைந்த சிஜில் ஆவேசத்தில் குழந்தையை எடுத்து மடியில் உட்கார வைத்து கைமுட்டியால் வயிற்றிலும், மார்பிலும் பலமாக இடித்துள்ளார். வலியால் குழந்தை அலறி அழுதபோதும் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லவில்லை.

அந்த உட்புறக் காயம் காரணமாக குழந்தைக்கு மறுநாள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்துள்ளது. சிஜிலின் மொபைல் போனை ஆய்வு செய்ததில் பலருடன் செக்ஸ் சாட் செய்ததும், அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது" என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.