குடிபோதையில் விழுந்த கணவன்; காய்கறி வெட்டிய கத்தியுடன் பிடித்த மனைவி - டெல்லியில் சோகம்

டெல்லி அருகில் உள்ள குருகிராம் என்ற இடத்தில் வசித்து வந்தவர் சுனில் குமார். கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்று தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். சுனில் குமார் மனைவி மம்தா.

சுனில் குமார் வழக்கமாக மது அருந்துவது உண்டு. அவர் வெளியில் மது அருந்திவிட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்திருக்கிறார். அவர் தனது படுக்கை அறையில் இருந்து பாத்ரூம் செல்வதற்கு தள்ளாடியபடி வந்தார். வழியில் அவரது மனைவி காய்கறி வெட்டிக்கொண்டிருந்தார். அப்போது சுனில் குமார் எதிர்பாராத விதமாக போதையில் தவறி கீழே விழப்போனார்.

உடனே அவரை அவரது மனைவி கையில் இருந்த கத்தியோடு பிடித்து காப்பாற்ற முயன்றார். அவர் தனது கணவனை காப்பாற்றும் எண்ணத்தில்தான் பிடித்தார். ஆனால் எதிர்பாராத விதமாக மம்தா கையில் இருந்த கத்தி சுனில் குமார் நெஞ்சில் குத்திவிட்டது.

உடனே அவரை மம்தா அங்குள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றார். ஆனால் நெஞ்சு பகுதியில் கத்திக்குத்து ஆழமாக இருந்ததால் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். குடும்பத்தினர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவிததனர். ஆனால் நெஞ்சுப்பகுதியில் காயம் இருந்ததால் டாக்டர்கள் சுனில் குமார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் கத்திக்குத்து உறுதி செய்யப்பட்டது. அதோடு சுனில் குமார் மாரடைப்பு ஏற்பட்டு இறக்கவில்லை என்று பிரேத பரிசோதனை அறிக்கை கூறியது. இதையடுத்து மம்தாவிடம் போலீஸார் விசாரித்தபோது நடந்த சம்பவத்தை தெரிவித்தார். எனவே மம்தா மீது போலீஸார் கொலைக்கு நிகரான பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.