எங்கள் தோழமை கட்சிகள் உட்கட்சி விவகாரத்தில் பிரச்னையை ஏற்படுத்த வேண்டாம்- செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் கட்சியின் தரவுகள் பகுப்பாய்வுப் பிரிவு தலைவரும் ராகுல் காந்தியின் நண்பருமான பிரவீன் சக்கரவர்த்தி, தனது எக்ஸ் தளப்பக்கத்தில், உத்தரப்பிரதேச மாநிலத்தை விட தமிழகம் அதிக கடன் வாங்குவதாக கருத்து தெரிவித்திருந்தார்.

இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.பி ஜோதிமணி, எம்.பி சசிகாந்த் செந்தில் ஆகியோர் பிரவீன் சக்கரவர்த்தியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

பிரவீன் சக்ரவர்த்தி

மற்ற கட்சியினர் காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி வைக்க நினைப்பதால் தான் இதுபோன்ற கருத்தை பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்திருக்கிறார் என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று (டிச.31) சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “எங்கள் கட்சியில் என்ன பிரச்னையோ அதை நாங்கள் பேசி தீர்த்துக்கொள்வோம்.

தமிழ்நாடு அரசுக்கு எதிராகவோ, பாஜகவிற்கு ஆதரவாகவோ யாராவது பேசினால், அந்தப் புகாரை எங்கள் தலைமையிடம் தெரிவிப்போம். அதற்கான நடவடிக்கைகளை அவர்கள் நிச்சயம் எடுப்பார்கள்.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், எங்களுடைய தோழமை கட்சிகளும் இந்தப் பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம். உட்கட்சி விவகாரத்தில் பிரச்னையை ஏற்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோளை வைக்கிறேன்.

செல்வப்பெருந்தகை - பிரவீன் சக்கரவர்த்தி
செல்வப்பெருந்தகை - பிரவீன் சக்கரவர்த்தி

ஏனென்றால் நடவடிக்கை எடுக்க சொல்லி ஏற்கனவே பரிந்துரைத்து விட்டோம். தமிழ்நாட்டு மக்களை தலைக்குனிய வைப்பதோ, தமிழ் மண்ணை தலைக்குனிய வைப்பதோ, தமிழ்நாடு அரசு மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சொல்வதோ கூடாது அப்படி கூறினால் காங்கிரஸ் பேரியக்கம் நடவடிக்கை எடுக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.