Dosa King: மோகன்லாலுடன் கைகோக்கும் இயக்குநர் த.செ.ஞானவேல்; பாலிவுட் நிறுவனம் இணைந்த பின்னணி என்ன?

ஜெய்பீம், வேட்டையன் படங்களின் இயக்குநர் த.செ.ஞானவேல், அடுத்த அதிரடிக்கு ரெடியாகி விட்டார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுப்பதில் துளியும் சமரசம் கலந்திடாத இயக்குநர் எனப் பெயர் வாக்கிய ஞானவேல், இப்போது மோகன்லாலை வைத்து தோசா கிங் என்ற படத்தை இயக்க உள்ளார்.

ஜெய்பீம்

ஹோட்டல் தொழிலில் புகழ்பெற்றுத் திகழ்ந்தவர் மறைந்த ராஜகோபால். அவர் தன் கணவர் சாந்தகுமாரைக் கொலை செய்து விட்டதாகப் புகார் அளித்து தமிழகத்தையே பரபரப்புக்குள்ளாக்கியவர் ஜீவஜோதி. கணவரின் கொலைக்கு நீதி கேட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைப்பதற்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் ஜீவஜோதி என்பார்கள்.

ராஜகோபாலின் வாழ்க்கை மற்றும் அவருடனான ஜீவஜோதியின் சட்டப்போராட்டம் ஆகியவற்றை மையப்படுத்தி ஒரு படம் உருவாகிறது. இந்தக் கதையை பலரும் படமாக்க விரும்பினார்கள். ஆனால், ஜீவஜோதியிடமிருந்து பாலிவுட் பட நிறுவனமான ஜங்கிலி, ரைட்ஸை வாங்கியிருப்பதால், ஜங்கிலியே இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

 ராஜகோபால் - ஜீவஜோதி
ராஜகோபால் - ஜீவஜோதி

இதில் நீதிமன்ற காட்சிகள் அதிகம் இருப்பதாலும், ஜெய்பீம் படத்தில் நீதிமன்ற காட்சிகள் மூலம் அழுத்தமாக உண்மையை எடுத்துரைத்ததால் இயக்குநர் த.செ.ஞானவேல் இந்தப் படத்தை இயக்கினால் சரியான தேர்வாக இருக்கும் எனக் கருதிய ஜங்கிலி நிறுவனம், அவரையே இயக்குநர் ஆக்கியிருக்கிறது.

Mohanlal - மோகன்லால்
Mohanlal - மோகன்லால்

தோசா கிங் என்ற தலைப்பையும் பதிவு செய்து வைத்திருந்தார்கள். ஜெய்பீம் படத்திற்குப் பின் தோசா கிங் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இயக்குநர் ஞானவேல், வேட்டையன் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு அமைய, அதனை முடித்துவிட்டே, தோசா கிங்கிற்குள் வருகிறார். இது குறித்து விசாரிக்கையில் கிடைத்த தகவல்கள் இனி..

ஜீவஜோதி தன் கணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெரும் சட்டப் போராட்டம் நடத்தி, அதில் தொடர்புடைய ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை பெற்றுத் தந்தார். அதை மையப்படுத்தின கதையாக தோசா கிங் உருவாகிறது. இயக்குநர் ஞானவேல் ஜெய்பீம் முடித்த உடனே இந்தக் கதையை இயக்க நினைத்தார். ஆனால், அவருக்கு ரஜினியின் வேட்டையன் படம் அமையவே அதனை இயக்க சென்றார்.

படத் தயாரிப்பு நிறுவனமான ஜங்கிலி, ஞானவேலைத் தேர்வு செய்ததற்குக் காரணம், தோசா கிங் தமிழகத்தில் நடந்த உண்மை சம்பவம் என்பதால் தமிழ்ப் பட இயக்குநர் இந்தப் படத்தை இயக்கினால் சிறப்பாக இருக்கும் எனக் கருதிய தயாரிப்பு நிறுவனம், ’ஜெய்பீம்’ பட இயக்குநர் த.செ.ஞானவேலிடம் கேட்டிருக்கிறது .

அது போலக் கடந்த சில வருடங்களாகவே ஜீவஜோதியின் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க ஜங்கிலி பிக்சர்ஸ் நிறுவனம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டு கையெழுத்தும் ஆகிவிட்டது. தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கொலை, அது தொடர்பான சட்டப்போராட்டம் என ஜீவஜோதியின் வாழ்க்கையில் நடந்த பரபரப்புகள் நிறைந்த சம்பவங்களைக் கேட்டு திரைக்கதையைத் தயார் செய்துள்ளனர். ’ஜெய்பீம்’ படத்தில் உண்மை சம்பவத்தை யதார்த்தமாக எடுத்திருந்தார் இயக்குநர் த.செ.ஞானவேல். இந்த வாழ்க்கையும் அதேபோல் அசலாகப் படமாக்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார்கள்.

ரஜினியுடன் த.செ.ஞானவேல்
ரஜினியுடன் த.செ.ஞானவேல்

அதைப்போல ஞானவேலும் தோசா கிங்கிறாகவே இரண்டு வருடங்களுக்கு மேலாக உழைத்து ஸ்கிரிப்ட்டை ரெடி செய்திருக்கிறார். சமீபத்தில் மோகன்லாலைச் சந்தித்து இந்தக் கதையைச் சொல்லியிருக்கிறார் ஞானவேல். முழுக்கதையையும் கேட்டு வியந்த மோகன்லால் தோசா கிங்கில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.