தேனியில் எடப்பாடி பழனிசாமி வாகனம் முற்றுகை! ‘ஒன்றிணைய வேண்டும்’ என பெண்கள் முழக்கம்!
தேனி மாவட்டம் கம்பத்தில் பிரசாரம் மேற்கொள்ள சென்ற அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனம் முற்றுகையிடப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
வட தமிழகத்தில் பிரசாரத்தை முடித்த எடப்பாடி பழனிசாமி, தற்போது தென்மாவட்டங்களான மதுரை, தேனியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், தேனி மாவட்டம் கம்பத்தில் பிரசாரத்தில் ஈடுபட சென்ற எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தை அதிமுக கொடிகளுடன் இடைமறித்த பெண்கள், “ அனைவரும் ஒன்றிணைய வேண்டும்..” முழக்கமிட்டு கையில் பதாகைகளுடன் அங்கு கூடியதால் பரபரப்பு நிலவியது. மேலும், அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்களும் ஒட்டப்பட்டிருந்தது.
முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.
வெற்றி வாகை சூடி நல்லாட்சியைத் தமிழகத்தில் தருவதற்கு அனைவரையும் அரவணைத்து கட்சியில் சேர்க்க வேண்டும். இதனை விரைந்து செய்தால்தான் தேர்தல் களத்தை சந்திக்க முடியும்.
அனைவரையும் மீண்டும் இணைத்தால் மட்டுமே பிரசாரத்தில் பங்கேற்பேன். இணைக்காவிட்டால் ஒரே மனப்பான்மையில் இருப்பவர்கள் ஒன்றிணைவோம்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனால், கட்சியில் பிரிந்த ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் மீண்டும் இணைந்து கட்சியை வலுப்படுத்தி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்களும், நிர்வாகிகளும் விரும்புகின்றனர்.
எனவே, கட்சியிலிருந்து விலகியவர்கள் மீண்டும் இணைவார்களா அதற்கு எடப்பாடி பழனிசாமி ஏற்றுக்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Edappadi Palaniswamis vehicle blocked in Theni
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


