போப் பதினான்காம் லியோவுடன் இஸ்ரேல் அதிபர் சந்திப்பு!

இஸ்ரேல் அதிபர் ஐசாக் ஹெர்சோக், வாடிகன் நகரத்தில், போப் பதினான்காம் லியோவை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

காஸா மீதான ஆக்கிரமிப்புகளை அதிகரிக்க, இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ள நிலையில், பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென, வாடிகன் நகரத்தின் தலைவரும் கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மதகுருவுமான போப் பதினான்காம் லியோ வலியுறுத்தி வருகின்றார்.

இந்நிலையில், போப் பதினான்காம் லியோவின் அழைப்பை ஏற்று வாடிகன் நகரத்துக்கு சென்ற இஸ்ரேல் அதிபர் ஐசாக் ஹெர்சோக், இன்று (செப்.4) அவரை நேரில் சந்தித்து உரையாடியதாக, இஸ்ரேல் தரப்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இதனை மறுத்த வாடிகன் நகரத்தின் செய்தித்தொடர்பாளர் மேட்டியோ புரூனி, இஸ்ரேல் அதிபர் ஹெர்சோக்தான் போப் லியோவை சந்திக்கக் கோரிக்கை விடுத்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில், மத்திய கிழக்கில் வசிக்கும் கிறிஸ்துவர்களின் பாதுகாப்பு மற்றும் பிணைக் கைதிகளின் விடுதலை ஆகியவற்றைக் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

கடந்த 2023-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஹமாஸ் - இஸ்ரேல் போரில், பாலஸ்தீனர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு, மறைந்த போப் பிரான்சிஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.

மேலும், அங்கு நடைபெறுவது இனப்படுகொலையா என்பதை உறுதி செய்ய விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறியிருந்தார்.

இதில், கடந்த மே மாதம் முதல் பதவி வகிக்கும் போப் பதினான்காம் லியோவும், இஸ்ரேல் - ஹமாஸ் இடையில் போர்நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: போலி விண்வெளி வீரரின் காதலில் விழுந்த மூதாட்டி! ரூ. 6 லட்சத்தை இழந்தார்!

Israeli President Isaac Herzog met with Pope Leo XIV in the Vatican City.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.