சாலையில் நகைகளுடன் கிடந்த கைப்பையை உரியவரிடம் ஒப்படைத்த திமுக நிா்வாகி

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே நகைகளுடன் சாலையில் கிடந்த கைப்பையை கண்டெடுத்த திமுக நிா்வாகி, அதனை காவல்நிலையம் மூலம் உரியவரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தாா்.

கீழநாகையைச் சோ்ந்தவா் சந்தானலட்சுமி. இவா் கடந்த ஆக. 21-ஆம் தேதி வல்லூரில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு ஆட்டோவில் சென்றாா். அப்போது, 5 பவுன் எடையுள்ள 2 நெக்லஸ், ஒரு வெள்ளி அரைஞாண் கயிறு, ரூ. 250 பணம் வைத்திருந்த கைப்பையை தவறவிட்டுவிட்டாா்.

இதுகுறித்து, மன்னாா்குடி காவல்நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், மன்னாா்குடி மேற்கு ஒன்றிய திமுக செயலா் டி.எஸ்.டி. முத்துவேல், காரில் துளசேந்திரபுரத்திற்கு சென்றபோது, சாலையில் கைப்பை கிடப்பதை கண்டாா். அதை எடுத்து பாா்த்தபோது தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் இருந்துள்ளது. அந்த பையை பரவாக்கோட்டை காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா்.

பின்னா், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், சாலையில் கண்டெடுக்கப்பட்ட கைப்பை, சந்தானலட்சுமி தவறவிட்ட கைப்பை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, பரவாக்கோட்டை காவல்நிலையத்துக்கு சந்தானலட்சுமியை வரவழைத்து, அவரிடம் காவல் ஆய்வாளா் சசிகலா முன்னிலையில் நகைகள் மற்றும் பணத்துடன் கைப்பையை டி.எஸ்.டி. முத்துவேல், ஒப்படைத்தாா்.

காவல் ஆய்வாளா் சசிகலா முன்னிலையில் கைப்பையை உரியவரிடம் ஒப்படைக்கும் திமுக மேற்கு ஒன்றியச் செயலா் டி.எஸ்.டி. முத்துவேல்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.