₹33,000 கோடி சந்தையை கட்டுப்படுத்தப் போகும் சட்டம்; `ஆன்லைன் கேமிங் மசோதா - ஏன்? எதற்காக?

ஆன்லைன் கேமிங்

இந்தியாவில் ஆன்லைன் கேமிங் துறை வேகமாக வளர்ந்து வரும் சூழலில், பணவிளையாட்டுகள் மூலமாக சமூக - பொருளாதார சிக்கல்கள் அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு, மத்திய அரசு ‘ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறை மசோதா, 2025’-ஐ பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இதற்கான ஒப்புதலையும் அளித்துள்ளது. ஏற்கனவே தமிழ்நாடு, ஹரியானா, தெலுங்கானா, நாகாலாந்து, மேகாலயா உள்ளிட்ட பல மாநிலங்கள் ஆன்லைன் விளையாட்டுகளை கட்டுப்படுத்தும் விதமாக தனித்தனிச் சட்டங்கள் உள்ள நிலையில், மத்திய அரசு ஒரே சட்டமாக கொண்டு வர இம்மசோதாவை அறிவித்துள்ளது.

ஆன்லைன் கேமிங்

இந்த மசோதாவின் நோக்கம், இ-ஸ்போர்ட்ஸ், கல்வி மற்றும் சமூக விளையாட்டுகளை ஊக்குவித்து ஒழுங்குபடுத்துவது, ஆன்லைன் சூதாக இருக்கும் பணவிளையாட்டுகளைத் தடைசெய்து, இளைஞர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை சமூக–பொருளாதார பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது இம்மசோதா.

என்ன மாதிரி ஆன்லைன் கேம்ஸ்’க்கு ஓகே?

இ-ஸ்போர்ட்ஸ், கல்வி மற்றும் சமூக விளையாட்டுகள் சட்டப்படி அனுமதி பெறுகின்றன; ஆனால் ரம்மி, போக்கர், பேட்டிங் போன்ற பணவிளையாட்டுகள் முழுமையாகத் தடை செய்யப்படுகின்றன.

விதிமுறைகள் & தண்டனைகள்

  • ஆன்லைன் பணவிளையாட்டுகளை (Money Games) நடத்துவோருக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஒரு கோடி ரூபாய் வரை அபராதம், அல்லது இரண்டும் வழங்கப்படலாம்.

  • இதற்கான விளம்பரம், பிரசாரம் அல்லது Promotion செய்தால், அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் சிறை அல்லது ஐம்பது லட்சம் ரூபாய் அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

  • வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்கள் ஆன்லைன் பணவிளையாட்டுகளுக்கான பரிவர்த்தனைகளுக்கு உதவினாலும், மூன்று ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு கோடி ரூபாய் அபராதம் வழங்கப்படும்.

  • தொடர் குற்றங்களுக்கு, தண்டனை இன்னும் கடுமையாக்கப்பட்டு, அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் சிறை மற்றும் இரண்டு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

பாகிஸ்தான் நாடாளுமன்றம்
பாகிஸ்தான் நாடாளுமன்றம்

இத்தண்டனைகள் தனிநபர்களுக்கும் மட்டுமல்லாமல், நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் பணப்பரிவர்த்தனை சேவைகளுக்கும் பொருந்தும் என்பதால், சட்டத்தின் அமலாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் , ஆன்லைன் கேமிங் துறைக்கான கட்டுப்பாட்டை உறுதி செய்ய மத்திய அரசு “ஆன்லைன் கேமிங் ஆணையம்” ஒன்றை அமைக்க உள்ளது. இந்த ஆணையமே விளையாட்டுகளின் அங்கீகாரம், தடை, நிறுவனங்களின் பதிவு–உரிமம் மற்றும் பயனர்களின் புகார் ஆகியவற்றை கவனிக்கும்.

இந்தியாவின் ஆன்லைன் கேமிங் சந்தை 2024–25’ல் ₹33,000 கோடி அளவுக்கு வளர்ந்துள்ளது; அதில் 85% பணவிளையாட்டுகளே. இத்துறையால் ஏற்கெனவே ₹20,000 கோடி வரி வசூலானாலும், சட்டவிரோத தளங்களின் பரிவர்த்தனைகள் ₹8.7 லட்சம் கோடி வரை சென்றுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதனால் ஆண்டுதோறும் சுமார் ₹2 லட்சம் கோடி வரி இழப்பு ஏற்படுகிறது. மேலும், 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டாலும், பணவிளையாட்டுகள் இளைஞர்களுக்கு அடிமைத்தனம், கடன் சுமை, மனநல பாதிப்பு மற்றும் குடும்பச் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

எனவே இம்மசோதா வளர்ச்சி, ஒழுங்கு, பாதுகாப்பு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைக்கும் சட்ட கட்டமைப்பாக திகழும் என பொதுமக்கள் வட்டாரத்தில் நம்பப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.