Pakistan: ஒரு சொட்டு தண்ணீரைக் கூட பறிக்க முடியாது - ஷெபாஸ் ஷெரிஃப் எச்சரிக்கை!

இந்தியா பாகிஸ்தான் இடையேயான மோதல் நிறுத்தத்துக்கு வந்தாலும், சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்திய முடிவில் இருந்து இந்தியா பின்வாங்காது என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

முன்னதாக சிந்து நதி நீரை நிறுத்தி வைப்பது போர் நடவடிக்கையாகக் கருதப்படும் என பாகிஸ்தான் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தும் இந்தியா அதன் முடிவிலிருந்து பின் வாங்கவில்லை.

Pakistan பிரதமர் பேசியதென்ன?

சிந்து நதி

தற்போது பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், பாகிஸ்தானுக்கு சொந்தமான ஒரு சொட்டு நீரைக் கூட இந்தியாவை அபகரிக்க விடமாட்டோம் எனப் பேசியிருக்கிறார்.

"நான் எதிரிகளுக்கு இன்று சொல்கிறேன். நீங்கள் எங்கள் தண்ணீரை நிறுத்தி வைக்க நினைத்தால், இதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் உங்களால் எங்களது ஒரு சொட்டு தண்ணீரைக் கூட அபகரிக்க முடியாது" எனக் கூறியிருக்கிறார் ஷெரிஃப்.

மேலும் இந்தியா அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால், "உங்கள் காதுகளைப் பிடித்துக்கொண்டே இருக்கும்படியான பாடம் கற்பிக்கப்படும்" என்றும் கூறியுள்ளார்.

அசிம் முனீர்
அசிம் முனீர்

"சிந்து நதி இந்தியாவின் குடும்பச் சொத்து அல்ல"

ஒருநாள் முன்னதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநீக்கம் செய்வது சிந்துவெளி நாகரீகத்தின் மீதான தாக்குதல் என்றும், இதை வைத்துப் போருக்கு கட்டாயப்படுத்தினாலும் பாகிஸ்தான் தயங்காது என்றும் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் வசிக்கும் பாகிஸ்தான் மக்கள் முன்னிலையில் உரையாற்றிய ராணுவ தளபதி அசீம் முனீர், இந்தியா தண்ணீரை நிறுத்த எந்த அணை கட்டினாலும் பாகிஸ்தான் அதை உடைக்கும் எனப் பேசியிருந்தார்.

"சிந்து நதி ஒன்றும் இந்தியர்களின் குடும்பச் சொத்து அல்ல. நதியை நிறுத்த இந்தியா மேற்கொள்ளும் முயற்சிகளை தகர்த்தெறிவதற்கான பொருட்களுக்கு எந்த பஞ்சமும் இல்லை" எனக் கூறியிருந்தார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.