சென்னை: பாலியல் சீண்டல்? - முதியவர் கொலையில் திருநங்கை கைது!

சென்னை, அபிராமபுரம், விசாலாட்சி தோட்டம் பகுதியில் யாசகம் செய்து வந்தவர் சேகர் (57). இவருக்கு திருமணமாகவில்லை. கடந்த 07.08.2025-ம் தேதி இரவு விசாலாட்சி தோட்டம் பகுதியில் சேகர் நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த திருநங்கை மனோஜ் (எ) நந்திகா (எ) ஜெசிகா என்பவர் அங்கு வந்திருக்கிறார். திருநங்கை ஜெசிகாவை சேகர் தொட்டு பேசியதாகக் கூறப்படுகிறது. அதனால் திருநங்கை ஜெசிகா, முதியவர் சேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இருவருக்கும் நடந்த வாக்குவாதம் கைகலப்பாக மாற, ஆத்திமடைந்த ஜெசிகா, முதியவர் சேகரை கீழே தள்ளி விட்டிருக்கிறார். பின்னர் அங்கிருந்து ஜெசிகா சென்றுவிட்டார். கீழே விழுந்த சேகர், உயிருக்கு போராடியிருக்கிறார்.

திருநங்கை ஜெசிகா

அதனால் அவரை மீட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் 11- ம் தேதி உயிரிழந்தார். சேகர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தகவல் அபிராமபுரம் காவல் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சேகரிடம் போலீஸார் விசாரித்தபோது திருநங்கை ஜெசிகா, தள்ளிவிட்ட தகவலை அவர் தெரிவித்திருக்கிறார். அதனால் ஜெசிகா மீது கொலை வழக்குப்பதிவு செய்த அபிராமபுரம் போலீஸார் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து அபிராமபுரம் போலீஸார் கூறுகையில், ``கைதான ஜெசிகாவிடம் விசாரித்தோம். அப்போது அவர், முதியவர் சேகர், சம்பவத்தன்று மதுபோதையிலிருந்தார். மேலும் அவர், தன்னிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டார். அதனால்தான் முதியவர் சேகரை தள்ளிவிட்டேன் என்று கூறினார் ஜெசிகா. முதியவர் சேகர் இறந்ததையடுத்து கொலை வழக்குப்பதிந்து ஜெசிகாவை கைது செய்ததோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்திருக்கிறோம்" என்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.