அகரம் அறக்கட்டளை: இந்த முயற்சியில் உங்களுக்குச் சேவையாற்றத் தயார் - கமல்ஹாசன் நெகிழ்ச்சி

நடிகர் சூர்யாவின் அகரம் அறக்கட்டளையின் 20வது ஆண்டுவிழாவில் மாநிலங்களவை உறுப்பினரும் நடிகருமான கமல்ஹாசன் நேற்று (ஆகஸ்ட் 3) கலந்துகொண்டார்.

அந்த நிகழ்வையும் சூர்யாவை வாழ்த்தும் வகையில், "நாம் இருவரும் நேசிக்கும் இந்த உன்னத முயற்சியில் நான் எப்போதும் உங்களுக்குச் சேவையாற்றத் தயார்" எனக் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற இலச்சினையுடன் அவர் வெளியிடும் முதல் அறிக்கை இது.

அகரம் விழாவில் கமல் ஹாசன் பேச்சு

அதில், "நீங்கள், ஜோதிகா, கார்த்தி, பிரிந்தா, உங்கள் மதிப்பிற்குரிய தந்தை சிவகுமார் அண்ணா மற்றும் தாயார் லட்சுமி அண்ணி ஆகியோர் எனது விரிவாக்கப்பட்ட குடும்பத்தின் ஒரு பகுதி என்றே உணர்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அமைதியான புரட்சி...

அத்துடன், "அகரம் அறக்கட்டளையின் 15 ஆண்டு விழா எனக்கு ஆழ்ந்த மகிழ்ச்சியைத் தந்ததுடன் மனதைத் தொட்டது. அகரத்திலிருந்து தோன்றிய மருத்துவர்கள், கண்டுபிடிப்பாளர்கள், சிந்தனையாளர், தலைவர்கள் பெற்றது வெறும் தனிப்பட்ட வெற்றிகள் அல்ல, அர்ப்பணிப்பும், பொதுச் சேவையின் உணர்வும் நிறைந்த கல்வியும் இணையும்போது எதைச் சாதிக்க முடியும் என்பதற்கான உயிரோட்டமான சாட்சிகள் அவர்கள்.

ஒரு குழந்தை, ஒரு கனவை வளர்ப்பதன் மூலம் நீங்களும் உங்கள் அகாரம் குழுவும் அமைதியான புரட்சியொன்றைத் தூண்டி விட்டீர்கள். உங்கள் அறக்கட்டளையின் செயல்கள் வெறும் எண்ணிக்கையால் அல்ல, அது உருவாக்கும் மாற்றத்தின் தாக்கங்களால் மதிக்கப்படும்.

அகரம் - சூர்யா - கமல்ஹாசன்
Agaram - surya - kamal haasan

அகாரம் வழியாக வலிமை பெற்ற ஒவ்வொரு குழந்தையும் நோய்களைச் சரியாக்கும், சமுதாயத்தை வழிநடத்தும், மற்ற பலரை உயர்த்தும் திறனைக் கொண்டிருக்கிறது. இது அடுத்த தலைமுறைகள் வரையில் பரவிச் செல்லும் அலைகளை உருவாக்கும்" எனப் பாராட்டினார்.

மேலும், "உங்கள் முயற்சிகள் வளரும் இந்தியாவின் ஆன்மாவை வெளிக்காட்டுகின்றன. கல்வி என்ற ஒளி, அர்ப்பணிப்புள்ள கைகளிலிருந்தால், பிறப்பும் சூழ்நிலையும் ஏற்படுத்தும் தடைகளைத் தாண்ட முடியும் என்பதைக் காட்டுகின்றன.

நீங்கள் பலருக்கு வெறுமனே பிழைத்திருப்பதற்கு மேலாக கனவுகள் காணும் வலிமையும், கண்ணியமும், நோக்கமும், சிறப்பும் பெறுவதற்கான துணிச்சலையும் கொடுத்திருக்கிறீர்கள்.

கமல் அறிக்கை
கமல் அறிக்கை

உங்கள் உறவினராகவும், மக்களின் பிரதிநிதியாகவும், இந்தக் குடியரசின் சக குடிமகனாகவும், நாம் இருவரும் நேசிக்கும் இந்த உன்னத முயற்சியில் நான் எப்போதும் உங்களுக்குச் சேவையாற்றத் தயார்.

அன்பான தமிழ்நாடு, உங்கள் மீது பொழிந்த அன்பை உங்கள் குடும்பத்தினர் கருணையுடன் திருப்பித் தந்துள்ளனர்.

காலப்போக்கில், உங்கள் பெயர் திரையிலும் மேடைகளிலும் பிரகாசித்தது மட்டுமல்லாமல், நீங்கள் உயர்த்தியவர்களின் வெற்றிகளிலும், அவர்கள் கொண்டு சென்ற ஒளியிலும், அது மேலும் நிலைத்திருக்கும் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.