Agaram: படிச்சா போதும்னு அண்ணன் சொல்லுவாரு; அண்ணி... - அகரம் மேடையில் கார்த்தி கலகல

சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின், விதைத் திட்டம் 15-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சென்னையில் இன்று பிரமாண்ட விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சிவக்குமார், சூர்யா, கார்த்தி, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, வெற்றிமாறன், சு. வெங்கடேசன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஒளிபரப்பப்பட்ட காணொளியில், "அகரம் பவுண்டேஷன் மூலம் 6,378 மாணவர்கள் கல்வி பெற்றிருப்பதாகவும், அவர்களில் 4,800 மாணவர்கள் முதல் தலைமுறை என்றும் தெரிவிக்கப்பட்டியிருந்தது.

அகரம் விதை 15-ம் ஆண்டு விழா

அந்தக் காணொளியைத் தொடர்ந்து, அகரம் பவுண்டேஷனால் கல்விபெற்ற மாணவர்கள் மேடையில், "கல்வி பெற்று, வேலை பெற்று குறைந்தபட்சம் ஒருவரையாவது படிக்க வைப்போம்" என்று உறுதிமொழி ஏற்றனர்.

ட்ரம்ஸ் சிவமணியின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது. இதில், பறை உள்ளிட்ட தாள கருவிகள் இசைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, அகரம் பவுண்டேஷன் மாணவர்களுக்கு உதவிய கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

பின்னர் மேடையில் பேசிய கார்த்தி, "பசங்க படிச்சிட்டா போதும் அண்ணா சொல்லுவாரு.

நிறைய காசு தேவைப்படுது என்ன பண்றது எனும்போதெல்லாம் அண்ணி சொல்லுவாங்க, `காசு வச்சா ஆரம்பிச்சோம், அன்பு வச்சு தானே ஆரம்பிச்சோம். அது வரும்-னு சொல்லுவாங்க.

அப்படி அண்ணி சொல்லலனா இவரால எப்படி தொடர்ந்து ஓட முடியும்.

எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகத்துல இருக்கு.

கோவிட் டைம்ல நிறைய ஹாஸ்பிடல்ஸ்ல சில கருவிகள் கிடைக்கல. அப்போது அண்ணி, நான் பண்றேன்னு சொன்னாங்க.

கார்த்தி
கார்த்தி

இதுக்கும் கல்விக்கும் சம்பந்தம் இல்ல. ஆனா அங்க ஒரு தேவை இருக்குன்னு அகரம் மூலமாக தெரியுது. அகரம் மூலமாகத்தான் சின்ன சின்ன கிராமத்துல தேவை இருக்குதுன்னு தெரியுது.

சின்ன வயசுல டிரெயின்ல ஊருக்கு போகும்போது போர்டர்ஸ் வருவாங்க. 50 ரூபா ஆகும்னு சொல்லுவாங்க. அப்பா சரி வா-னு கூப்பிட்டு போவாங்க.

50 ரூபா அதிகம்னு அப்பா கிட்ட சொல்லுவேன். ஏன்னா காசு விஷயத்துல ரொம்ப கறாரா இருப்பேன்.

ஆனா அங்க போனா அப்பா நூறு ரூபா எடுத்து கொடுப்பாரு. 50 ரூபாயே அதிகம் 100 ரூபா ஏன் கொடுக்றிங்க-னு கேட்டா, அந்த நூறு ரூபா வச்சு வீடு கட்டிடுவானா, வீட்டுக்கு போனா புள்ளைக்கு ஏதாவது சாப்ட வாங்கி கொடுப்பான்-னு சொல்லுவாரு.

மகளுடன் ஜோதிகா
மகளுடன் ஜோதிகா

பத்து வயசுல இத கேட்டேன். இன்னைக்கு வரைக்கும் அது எனக்கு மறக்கவே இல்லை.

இந்த மாதிரி விஷயத்தை நான் தொடர்ந்து கேட்டுகிட்டே இருக்கேன். நாம நல்லதேதான் செய்வோம். நம்ம கூட இருக்கிறவங்களும் நல்லதேதான் செய்வாங்க.

அடுத்தவங்க நல்லா இருக்கணும்னு நினைக்றவங்க அகரம் கூட சேருங்க. அப்படி கை கோர்க்கும்போது அகரம் இன்னும் பலமாகும்.

நாம் படிக்க வைக்க வேண்டிய குழந்தைகள் இன்னும் நிறைய பேர் இருக்றாங்க.

நிறைய பேரின் அன்பும் நேரமும் தேவைப்படுகிறது. எல்லாரும் ஒன்று சேர்வோம். அகரம் நம்முடைய அகரமாக இருக்கட்டும். தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்போம்" என்று கூறினார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.