தங்கம், வைரம் இல்லை, ஆனா... உலகின் மதிப்புமிக்க பொருளைத் தரும் மரங்கள்; இவ்வளவு மவுசு ஏன்?

அகர்வுட் என்று அழைக்கப்படும் அகில் மரம் உலகின் மிக விலையுயர்ந்த இயற்கைப் பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தங்கம், வைரம்போல் இது ஒளிர்வதில்லை ஒரு இருண்ட மணமிக்க மரமாக இருக்கிறது.

இதிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்க்கு தான் அவ்வளவு மவுசு. இதன் தனித்துவமான மணத்திற்காக உலகின் மிக விலையுயர்ந்த இயற்கைப் பொருட்களாகக் கருதப்படுகிறது.

அகர்வுட் எங்கிருந்து வருகிறது?

இந்த மரங்கள் இந்தியா, வங்கதேசம் மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் சில பகுதிகளில் வளர்கின்றன. இவை பொதுவாக சாதாரண மரங்களாக தான் வளர்கின்றன, ஒரு குறிப்பிட்ட வகை பூஞ்சையால் தாக்கப்படும்போது இந்த மரம் ஒரு மணமிக்க பிசினை உருவாக்குகிறது.

பல ஆண்டுகளாக இந்த பிசின் மரத்தின் உள்ளே பரவி அகர்வுட்டாக ( நறுமணமிக்க மரம்) மாறுகிறது.

இந்த செயல்முறை அனைத்து மரங்களிலும் நிகழ்வதில்லை. சில மரங்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிசின் உருவாகிறது. இதனால் அகர்வுட் இயற்கையாகவே அரிதானது, கண்டுபிடிப்பதும் கடினமானதாக இருக்குமாம்.

ஏன் இவ்வளவு விலை உயர்ந்தது?

இந்தியா.காம் அறிக்கையின்படி, இந்தியாவில் உயர்தர அகர்வுட் ஒரு கிலோவுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. இது வெறும் மூலப்பொருளின் விலை மட்டுமே. இதன் மதிப்புக்கு சில காரணங்கள் உள்ளன.

பிசின் உருவாகுவது மிகவும் மெதுவான செயல்முறை, பெரும்பாலும் 10 முதல் 20 ஆண்டுகள் வரை ஆகலாம். எல்லா மரங்களிலும் பிசின் உருவாவதில்லை. அப்படி உருவானாலும் அதன் தரம் மாறுபடுகிறது. வாசனைத் திரவிய தயாரிப்பாளர்கள், தூப உற்பத்தியாளர்கள், பாரம்பரிய மருத்துவப் பயிற்சியாளர்கள் இதற்காக போட்டியிடுகின்றனர்.

பழைய மரங்களில், பெறப்படும் அகர்வுட் மிகவும் மதிப்பு மிக்கதாக கருதப்படுகிறது. வயதான விஸ்கி அல்லது உயர்தர ஒயின் போல, இதுவும் நீண்ட காலம் உருவாகும்போது அதன் தரமும் மதிப்பும் அதிகரிக்கிறது.

ஆடம்பரத்தை வரையறுக்கும் மணம்

அகர்வுட்டிலிருந்து பிரித்தெடுக்கப்படும் எண்ணெய், ஓவுத் (Oud) என்று அழைக்கப்படுகிறது. இது வழக்கமான வாசனைத் திரவியங்களிலிருந்து தனித்து நிற்கிறது.

பல ஆடம்பர வாசனைத் திரவிய பிராண்டுகள் தங்கள் மிக விலையுயர்ந்த தொகுப்புகளில் ஓவுத் ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துகின்றன. உண்மையான ஓவுத் எண்ணெயின் ஒரு சிறிய பாட்டில் பல்லாயிரக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

வாசனையைத் தாண்டிய முக்கியத்துவம்

ஆயுர்வேதம், சீன மருத்துவம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் பதற்றம், தூக்கமின்மை மற்றும் செரிமான பிரச்னைகளுக்கு சிறிய அளவு அகர்வுட் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

நவீன மருத்துவத்தில் இது பொதுவாகப் பயன்படுத்தப்படாவிட்டாலும், பாரம்பரிய முறைகளில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

வளர்ந்து வரும் நெருக்கடி

விலை உயர்ந்து, உலகளாவிய தேவை அதிகரிப்பதால், அதிகப்படியான அறுவடை ஒரு தீவிர பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. பல பகுதிகளில், பிசின் உள்ளதா என்பதைப் பார்க்க மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுகின்றன.

பிசின் இல்லாதபோது மரம் வீணாகிறது. இந்தப் பிரச்னையைச் சமாளிக்க, சில விவசாயிகள் தோட்ட வளர்ப்புக்கு மாறியுள்ளனர். கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் மரங்களை பூஞ்சாணத்தால் தொற்று ஏற்படுத்தி பிசின் உருவாக்குகின்றனர்.

அகர்வுட் இப்போது உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.