Health: சோர்வே போ போ.. எனர்ஜியே வா வா..! டாக்டர் கைடன்ஸ்!

சோர்வு... இதை அசதி, அலுப்பு, களைப்பு, தளர்ச்சி என்றெல்லாம் சொல்வார்கள். பொதுவாகவே நாள் முழுவதும் வேலை பார்ப்பதால், இரவில் சோர்வு ஏற்படுவது இயல்பே. சில வேளைகளில், பல நாள்கள் ஓய்வில்லாமல் வேலை பார்த்து, அதனால் அதீதச் சோர்வு ஏற்படுவது வழக்கம். ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில், பலரும் எப்போதும் சோர்வாகவே காணப்படுகின்றனர். கடுமையானது (Acute) மற்றும் நாள்பட்டது (chronic) எனச் சோர்வில் இரண்டு வகைகள் உண்டு. இதை மருத்துவ ரீதியாக ஆங்கிலத்தில் fatigue எனக் கூறுவார்கள். கடுமையான சோர்வு என்றால் சிறிது காலம் ஏற்படுவது. அதாவது, அதிக வேலை செய்வதாலோ பயணம் செய்வதாலோ தற்காலிகமாக ஏற்படக்கூடியது. நாள்பட்ட சோர்வு என்பது நீண்டகாலமாகச் சோர்வாக இருப்பது. இதற்கு முறையாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டியது அவசியம் என்கிற பொது மருத்துவர் சபீனா, சோர்வு ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள், உடல் சோர்வு ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பனவற்றை விளக்குகிறார்.

சோர்வு

* அஜீரணக் கோளாறு, கால்சியம் குறைவால் இரவில் காலில் வரக்கூடிய தசைவலி, உயர் ரத்த அழுத்தத்தால் வரும் தலைவலி, சர்க்கரை நோயால் இரவில் இரண்டு, மூன்று முறை சிறுநீர் கழிக்க நேர்வது ஆகியவை அலுப்பிற்கான முக்கியமான காரணங்களாகும்.

* மனஅழுத்தம்.

* போதுமான அளவு தூக்கம் இல்லாதவர்களுக்கும் இரவு நேரம் வேலை பார்ப்பவர்களுக்கும் அதிகளவு சோர்வு ஏற்படுகிறது.

* சில மருந்துகளை உண்பதால் சிலருக்குச் சோர்வு ஏற்படும். காய்ச்சல், ஜலதோஷம் ஆகியவற்றுக்காக உட்கொள்ளும் மாத்திரைகள் அதிகளவு சோர்வை ஏற்படுத்தக்கூடியவை.

* உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது.

* ஆரோக்கியமான உணவுகளை உண்ணாமலிருத்தல்; அதேநேரத்தில் ஜங்க் உணவுகளான பர்கர், பீட்சா மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்வது.

* ரத்தச்சோகை மிக முக்கியக் காரணமாகும். குறிப்பாக, மாதவிடாய் ஏற்படும் பெண்களுக்கு, அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டால் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும்.

* தைராய்டு சுரப்பு அளவுக்குக் குறைவாக இருந்தால் சோர்வு ஏற்படும். இன்றைய வாழ்க்கைமுறை காரணமாக 10-ல் 5 பெண்களுக்குத் தைராய்டு பிரச்னை ஏற்படுகிறது. அதனால், அடிக்கடி சோர்வு ஏற்பட்டால் உடனே தைராய்டு பரிசோதனை செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

தைராய்டு பாதிப்பு

* 7 முதல் 8 மணி நேரம் இடையூறு இல்லாத தூக்கம்.

* ஆரோக்கியமான, நீர்ச்சத்து மிக்க உணவுகளைச் சரியான அளவில் தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

* பழங்கள், காய்கறிகள் அதிக அளவில் சாப்பிடலாம்.

* காபி, தேநீர் போன்ற கஃபைன் அதிகமுள்ள பானங்களைப் பருகுவதைத் தவிர்க்க வேண்டும்.

* நம் உடல் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அதனால், தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, யோகா, கார்டியாக் உடற்பயிற்சி போன்றவற்றைத் தினசரி குறிப்பிட்ட நேரத்தில் செய்துவருவது உற்சாகத்தை ஏற்படுத்தும்.

* மனஅழுத்தம் ஏற்பட்டால் அதற்கான காரணங்களைத் தெரிந்துகொண்டு அதைச் சரிசெய்ய வேண்டும். மேலும், அதிகளவில் மன உளைச்சல் ஏற்பட்டால் உடனடியாக மனநல மருத்துவரை அணுகுவது சிறந்தது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.