PMK: Facebook சண்டை தொடங்கி அடிதடி வரை; இரு கோஷ்டியாகி மோதும் தொண்டர்கள்; என்ன செய்யப் போகிறது பாமக?

பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில நாள்களாக கருத்து மோதல் நிலவி வருகிறது. இருவரும் தனித்தனியாக நிர்வாகிகள் சந்திப்பு, பதவி நியமனம், பதவி பறிப்பு போன்றவற்றைச் செய்து வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் பாமக தலைவராக இருக்கக்கூடிய அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கம் செய்து பாமக நிறுவனர் ராமதாஸ் உத்தரவிட்டார்.

இப்படி நாளுக்கு நாள் தந்தை - மகன் சண்டை வலுவாகி வரும் நிலையில், பாமகவிற்கு வாக்கு வங்கி அதிகம் உள்ளதாகக் கருதப்படும் மாவட்டங்களில் ஒன்றான சேலம் மாவட்டத்தில் ராமதாஸ் குரூப் - அன்புமணி குரூப் என இரண்டாகப் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக ராமதாஸ் குரூப்பில் இருக்கக்கூடிய எம்எல்ஏ அருள் மற்றும் அன்புமணி குரூப்பில் உள்ள வன்னியர் சங்க மாநிலச் செயலாளர் கார்த்தி இடையே கடுமையான வார்த்தை போர் நடைபெற்று வருகிறது.

"அன்புமணியை, கார்த்திதான் தவறாக இயக்கி வருகிறார்" என்று எம்எல்ஏ அருள் வெளிப்படையாகத் தெரிவித்தார். இது சேலம் மாவட்ட பாமகவின் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அன்புமணி

இதனைத் தொடர்ந்து, ராமதாஸ் ஆதரவாளராக உள்ள எம்எல்ஏ அருளை பச்சோந்தி எனவும், கொலைகாரன் எனவும் சமூக வலைத்தளங்களில் அன்புமணி தரப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

சமூக வலைத்தள மோதல் தற்போது அடிதடியாக மாறி உள்ளது. சேலம் மாநகரில் ராமதாஸுக்கு ஆதரவாக மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் தலைமையில் ஒரு குழுவும், அன்புமணிக்கு ஆதரவாக முன்னாள் எம்எல்ஏ கார்த்தி தலைமையில் ஒரு குழுவும் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அருள் ஆதரவாளரான குரு என்பவர் கார்த்தி ஆதரவாளரான சதீஷ் என்பவரைக் கண்டித்து மிரட்டும் தோணியில் தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், "சதிஷ் நீ எனக்குப் பயந்து என்னோட எம்எல்ஏ அருள் அண்ணன் கிட்ட 2018ல போயிட்டுப் பயந்து நின்னு பேசினவன் நீ. அண்ணனைப் பத்தி பேசப் பதிவு செய்ய இப்ப உனக்கு என்ன தகுதி இருக்கு சதிஷ்...

ஒழுங்கா கூலிப்படை வேலையை நிறுத்திட்டு குடும்பத்தையும் பொழப்பயும் பாரு அதான் உனக்கு நல்லது. சதிஷ் உன் கூலிப்படைத் தலைவன் யாருன்னு எனக்கும் தெரியும்... எனக்கு என்னமோ கவுண்டர் மெஸ் காலி மெஸ் ஆகபோகுதுனு நினைக்கிறேன். அமைதியா இருக்கேன் சீண்டாத. சேலம் குரு வழக்கே போட்டாலும் அஞ்ச மாட்டேன். முன்னாடி இருந்த குருவ மறுபடியும் பாத்தரக்கூடாதுன்னு வேண்டிக்கோ..." எனப் பதிவிட்டிருந்தார்.

தொடர்ந்து, சேலம் அம்மாபேட்டை அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சதீஷ் நடத்தி வரும் உணவு கடையை அருளின் ஆதரவாளர்கள் சிலர் அடித்து உடைத்து அங்குப் பணியாற்றி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ரஹீம் என்பவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

ராமதாஸ்
ராமதாஸ்

இதில் காயமடைந்த ரஹீம் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக அம்மாபேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்குப் பதில் பதிவிட்ட சதீஷ், "மருத்துவர் அண்ணன் அன்புமணி ஆதரவுக்கான என்னுடைய பதிவைப் பிடிக்காமல் உடன் இருக்கும் அடியாட்களை வைத்து என்னுடைய கடையையும், வடமாநிலப் பணியாளரையும் அடித்து உடைத்த பாமக பச்சோந்தி ரௌடி அருள்... என் மனைவி வந்தவுடன் இருசக்கர வாகனத்தை விட்டு என் மனைவியிடம் அடிவாங்கி ஓடிய ரௌடி அருளின் சில்லறைகள்..." என்று பதிவிட்டார்.

கட்சியின் தலைவர் பதவிக்காக ராமதாஸும், அன்புமணியும் மோதிக் கொண்டு வரும் நிலையில் அவர்களுடைய ஆதரவாளர்களும் ஒருவருக்கொருவர் சமூக வலைத்தளங்களில் மிரட்டல் தோணியில் கருத்துக்களைப் பதிவிட்டு வருவதோடு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமகவில் நிலவிவரும் தொண்டர்களின் மோதல் தொடர்பாக கட்சி சீனியர்களிடம் பேசியபோது, "பாட்டாளி மக்கள் கட்சியில் நேற்று வரை மாமன், மச்சான், அண்ணன், தம்பி என இருந்தவர்கள் தற்போது ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாமக இன்று இரண்டாக இருக்கலாம். ஆனால், கூடிய விரைவில் ஒன்றாக இணையும் நாள் வரும். அப்போது தலைமையில் உள்ளவர்கள் ஒன்று சேர்ந்தாலும் மாவட்டத்தின் அடிப்படை தொண்டனாக இருப்பவர்கள் ஒன்று சேர முடியாத நிலை ஏற்படும்.

ராமதாஸ் - அன்புமணி
ராமதாஸ் - அன்புமணி

அந்த அளவிற்கு, ராமதாஸ் ஆதரவாளர்கள் அன்புமணியை மோசமாகப் பேசுவதும், அன்புமணி ஆதரவாளர்கள் ராமதாஸை மோசமாகப் பேசுவது நடக்கிறது. தலைமை மோதலை, மாநில நிர்வாகிகள் இணைந்து சரி செய்ய முயன்று வருகிறார்கள்.

எனவே மாவட்டத்தில் உள்ள அடிப்படை தொண்டர்கள் ராமதாஸாக இருந்தாலும், அன்புமணியாக இருந்தாலும், அருளாக இருந்தாலும், கார்த்தியாக இருந்தாலும் அனைவரும் பாட்டாளி மக்கள் கட்சியினர் என்பதை மனதில் வைத்துச் செயல்பட வேண்டும். 2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தொண்டர்களின் மோதல் தேர்தலில் எதிரொலிக்கும்" என வேதனையுடன் தெரிவித்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.