Phoenix: வளர்த்துகிட்டே இருக்கிறது இல்ல புள்ள - மகன் குறித்து நெகிழ்ந்த விஜய் சேதுபதி
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா நடிப்பில் உருவான பீனிக்ஸ் - வீழான் திரைப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடைபெற்றது.
"என் பையன் விஷயங்களை அவன்தான் முடிவு செய்யணும்"
இதில் கலந்துகொண்டு மகன் பற்றிப் பேசிய விஜய் சேதுபதி, "2019ல் அனல் அரசு என்கிட்ட கதை சொன்னாரு. ரொம்பநாள் கழிச்சு பாத்துகிட்டதால என்னுடைய குடும்ப புகைப்படங்களைக் காட்டினேன். அவரும் அவரது குடும்ப புகைப்படங்களைக் காட்டினார். பின்னர் ஜவான் பாடப்பிடிப்பில் சந்தித்தபோது இதைப் பற்றி பேசினோம். மகாராஜாவில் எனக்காக வந்து பணியாற்றினார்.
என்கிட்ட கதை சொன்னபிறகு, ‘நம்ம வீட்ல அந்த வயசுல ஒரு பையன் இருக்கான், அவனைப் பற்றி கேட்கவில்லையே’ன்னு தோனிச்சு. பிறகு செட்லதான் சொன்னாரு, உங்க பையன் சரியா இருப்பார்ன்னு. எனக்கு அப்போது சந்தோசமும் இருந்தது, பயமும் இருந்தது.
அப்பதான் காலேஜ் சேர்ந்திருந்தான். எப்படி பண்ணுவான்னு சந்தேகம் இருந்தது. ஆனால் என் பையனுடைய முடிவுகளை அவனேதான் எடுக்கணும்னு நெனச்சேன்.
சிந்துபாத் படம் நடிக்கும்போது அவனுக்கு 14 வயசு. அப்போது அவன் பழக வேண்டும் என்பதற்காக ஏர்போர்ட் மாதிரி இடங்களில் தனியாக விட்டேன். அப்போது அவனே வந்து, ‘அப்பா நான் இன்னும் வளரல, என்னைத் தனியா விடாத’ன்னு சொன்னான்.
இப்போ, இந்த விஷயத்தை அவனே கையளனும் நெனச்சேன். அவனேதான் மாஸ்டர்கிட்ட கதைகேட்டான்." என்றார்.
அவனுக்கு மாஸ்தான் ரொம்ப பிடிக்கும்
"வீட்ல வாழ்க்கையைப் பற்றி, நான் நடிச்ச படங்கள் பற்றி நிறைய பேசியிருக்கிறோம். என் தொழில் சினிமாதான் அதைப் பற்றி நான் குழந்தைகளிடம் அதிகம் பேசுவேன். மனித மனமும் மூளையும் எப்படி வேலை செய்கிறது என்பதை அந்த வழியாகத்தான் என் குழந்தைகளுக்குச் சொல்ல முடியும். சொல்லிக்கொடுப்பது என்பதைத் தாண்டி அவர்கள் கருத்தையும் கேட்பேன், எங்கள் விவாதம் ஜனநாயக முறையில்தான் இருக்கு.
வளர்த்துகிட்டே இருக்கிறது இல்ல புள்ள, ஒரு கட்டத்தில் அதுவே வளரணும் நெனச்சே. அதனால் இந்த படத்தின் பூஜையிலிருந்து எதிலும் நான் தலையிடவில்லை. மொத்த ஷூட்டிங்கிலும் ஒரே ஒருமுறைதான் போனேன். அவனிடம் ‘நீ என்ஜாய் பண்றியா’ன்னு கேட்டேன். பண்றேன்னு சொன்னான். அவன் விஷயங்களை அவன் பார்த்துப்பான் அதில எந்த கவலையும் இல்லை.
சின்ன வயசுல இருந்தே அவனுக்கு ‘மாஸ்’தான் ரொம்ப புடிக்கும். ஒரு படம் அமைந்திருந்தா கூட அனல் அரசு மாஸ்டரை வைத்து ஃபைட் எடுத்திருக்க முடியுமா தெரியல. ஆனால் உனக்கு (சூர்யா) அப்படி அமைந்திருக்கு." என்றார்.
"என் மனைவிக்குதான் ரொம்ப சந்தோஷம்!"
"வாழ்த்திப் பேசிய எல்லோரும் மனதார வாழ்த்தியிருந்தீங்க. ரொம்ப நன்றி. அனல் அரசு மாஸ்டர் ஸ்பீச் அரசியல்வாதி பேசியதுபோல இருந்தது.
தேவதர்ஷினிக்கும் அவங்க கணவருக்கும் நான் பெரிய ரசிகன். நீங்க உங்க மகனா பார்த்து வாழ்த்தியது பெரிய விஷயம்.
படம் நல்லா வந்திருக்கு. என் குழந்தைக்கு இப்படி ஒரு அனுபவம் கிடச்சிருக்கு. அவனை முதல் முறை ஸ்கூல்ல சேர்த்துவிட்ட மாதிரி ஒரு உணர்வு. பக்கத்துலதான் என் முதல் பட ஆடியோ லான்ச் நடந்தது. அப்போது நான் படபடன்னு இருந்தேன். இப்ப அதைவிட படபடப்பா இருக்கேன். ஆனாலும் ரொம்ப சந்தோசம இருக்கேன். என்னைவிட என் மனைவிக்கு தான் ரொம்ப சந்தோஷம். அவளுக்கு பேச வராது கூச்சமா இருக்கும். அவளுக்கும் சேர்த்து நான் நன்றி சொல்லிக்கிறேன்." என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


