Newyork: ``100% கம்யூனிஸ்ட் பைத்தியம்.. - இந்திய வம்சாவளி மேயர் வேட்பாளரை இழிவுபடுத்திய ட்ரம்ப்
நியூயார்க் மேயர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்தியா வம்சாவளியான ஜோரன் மம்தானி போட்டியிட தேர்வாகி இருக்கிறார்.
நவம்பர் 4-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த கர்டிஸ் ஸ்லிவா என்பவரை எதிர்க்கிறார் ஜோரன்.
ஜோரன் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவரைக் காட்டமாக தாக்கி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.
ஜோரனை ஆதரிக்கும் காங்கிரஸ்வுமன் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் (AOC) மற்றும் செனட்டர் சக் ஷுமர் ஆகியோரையும் விமர்சித்துள்ள ட்ரம்ப், "ஜோரன் கம்யூனிஸ்ட் பைத்தியக்காரன்" எனக் காட்டமாகப் பேசியுள்ளார்.
"ஜனநாயகக் கட்சியினர் எல்லைமீறிவிட்டனர். ஜோரா மம்தானி 100% ஒரு கம்யூனிஸ்ட் பைத்தியம். டெம் பிரைமரியை வென்று, மேயராகவதற்காக வருகிறார்.
நாம் தீவிர இடதுசாரிகளைக் கண்டிருக்கிறோம். ஆனால் இது அபத்தமாகி வருகிறது. அவர் பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கிறார், அவரது குரல் எரிச்சலூட்டுகிறது. அவர் புத்தியாசலியான நபர் இல்லை.
அவருக்கு நான்கு காங்கிரஸ் பெண்மணிகள் ஆதரவு இருக்கிறது, எல்லா டம்மிகளும் அவரை ஆதரிக்கின்றனர், நமது கிரேட் பாலஸ்தீன செனட்டர் அழுகுனி சக் ஷுமர், அவரிடம் கெஞ்சுகிறார்..." என ஜனநாயக கட்சியினர், முற்போக்கு அரசியல்வாதிகள் அனைவரையும் இழிவுபடுத்திப் பேசியுள்ளார் ட்ரம்ப்.
``நெதன்யாகுவை கைது செய்வேன் - ஜோரனின் அரசியல் பார்வை
நியூயார்க் சட்டமன்ற தேர்தலில் குயின்ஸின் அஸ்டோரியா தொகுதியின் பிரதிநிதியாக வெற்றிபெற்றுள்ளார் ஜோரன்.
மாநகராட்சி நிர்வாகத்தால் நடத்தப்படும் மளிகைக் கடைகளை நிறுவுதல், நிலையான வாடகையுடன் வீடுகளில் வாடகை உயர்வை முடக்குதல் மற்றும் இலவச நகரப் பேருந்துகளை வழங்குதல் போன்ற திட்டங்களை இவர் முன்மொழிந்துள்ளார்.
இதற்காக நகரின் பணக்காரர்கள் மீது 10 பில்லியன் டாலர்கள் வரியை அதிகரிக்கத் திட்டம் உள்ளதாம்.
மம்தானி தனது பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ளார். "இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நியூ யார்க் வந்தால் நவம்பர் 2024-ல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வெளியிட்ட பிடிவாரண்ட்டை வைத்து அவரை கைது செய்வேன்" எனப் பேசியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


