வால்பாறை தொகுதி அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி காலமானார்!

கோவை மாவட்டம், அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் அமுல் கந்தசாமி. அதிமுக பிரமுகரான இவர் வால்பாறை தொகுதி எம்எல்ஏவாகவும், அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மாநில துணைச் செயலாளராகவும் இருந்தார். நீண்ட காலமாக அதிமுகவில் பயணித்து வரும் கந்தசாமி,

அமுல் கந்தசாமி

அதிமுக மாணவரணி, பொதுக்குழு உறுப்பினர் பதவிகளில் இருந்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் அரங்கநாயகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

இதன் மூலம் இரண்டு முறை மாவட்ட கவுன்சிலராக இருந்த அமுல் கந்தசாமி, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்தார். கடந்த சில மாதங்களாகவே அவர் தீவிர புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

அமுல் கந்தசாமி

கடந்த சில நாள்களாக உடல்நிலை மிகவும் மோசமடைந்து கோவை தனியார் மருத்துவமனையில் செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனில்லாமல் அமுல் கந்தசாமி இன்று மாலை உயிரிழந்தார். அவருக்கு வயது 60.

கந்தசாமிக்கு கலைச்செல்வி என்கிற மனைவியும், சுபநிதி என்ற மகளும் உள்ளனர். அவரின் மறைவு அதிமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கந்தசாமியின் உடலுக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

எடப்பாடி பழனிசாமி அஞ்சலி

மேலும் அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அன்னூர் மின் மயானத்தில் அமுல் கந்தசாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.