Thug Life: அதனால் எங்களுக்கு 30 கோடி நஷ்டம்! - ராஜ்கமல் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் தகவல்!

கடந்த ஜூன் 5-ம் தேதி கமல் ஹாசன் - மணி ரத்னம் கூட்டணியில் உருவான தக் லைஃப் திரைப்படம் கர்நாடகாவைத் தவிர்த்து உலகம் முழுவதும் வெளியானது.

தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழிலிருந்துதான் கன்னட மொழி பிறந்தது என கமல் பேசிய விஷயத்திற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

Thug Life

இதைத் தொடர்ந்து இப்படியான கருத்தைக் கூறிய கமல் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில், படத்தை கர்நாடகாவில் வெளியிடமாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறியிருந்தது.

கமல் மன்னிப்புக் கேட்க மறுத்ததால் ஜூன் 5-ம் தேதி கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகவில்லை.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற விடுமுறை கால சிறப்பு அமர்வு நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் நீதிபதிகள், "தக் லைஃப் திரைப்படம் வெளியிடுவதற்கு கர்நாடக அரசு பாதுகாப்பை அளிக்க வேண்டும். திரைப்படம் வெளியாகும்போது வன்முறைகள் ஏற்பட்டால் அதனை அரசு அடக்க வேண்டும்.

வன்முறையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். படம் திரையிடப்படுவதற்கு யாரேனும் தடையாக இருந்தால் அவர்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளைப் பதிவு செய்ய வேண்டும்." என உத்தரவிட்டனர்.

தக் லைஃப்
‘தக் லைஃப்’ படத்தில்...

இந்த வழக்கு விசாரணையின்போது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், "தக் லைஃப் திரைப்படம் கர்நாடகத்தில் வெளியாகாததால் எங்களுக்கு 30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது." எனக் கூறியிருக்கிறார்.

தக் லைஃப் படத்தின் கர்நாடக வெளியீட்டு உரிமத்தைப் பெற்ற விநியோகஸ்தர் வெங்கடேஷ் கமலகர், "நாளை மூன்று தமிழ் திரைப்படங்கள் வெளியாவதால் இங்கு போதுமான திரையரங்குகள் இல்லை. திரைப்படமும் இன்னும் இரு வாரங்களில் ஓ.டி.டி-யில் வந்துவிடும். அதனால் படத்தை கர்நாடகத்தில் திரையிட முடியாது." எனக் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.