யூடியூபர் முதல் கல்லூரி மாணவர் வரை.. பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 11 பேர் கைது - நடந்தது என்ன?

இந்தியா, பாகிஸ்தான் இடையே மோதல் நடந்து முடிந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு உளவுப் பார்த்ததாக இந்தியாவில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது. 

ஜோதி மல்ஹோத்ரா 

ஹரியானாவின் ஹிசார் நகரைச் சேர்ந்த 33 வயது யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா. இவர் ‘Travel With Jo’ என்ற யூடியூப் சேனலை நிர்வகிக்கிறார். இவருக்கு பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய டேனிஷ் என்ற அதிகாரியுடன் தொடர்பு இருந்திருக்கிறது. மேலும், டெல்லியில் பாகிஸ்தான் அதிகாரியான அசன்-உர்-ரஹிமை சந்தித்து பேசியிருக்கிறார். 2004-ம் ஆண்டு இவர் இரண்டு முறை பாகிஸ்தான் சென்று ரகசிய தகவல்களைப் பகிர்ந்ததாகக் கூறப்படுகிறது.

ஜோதி மல்ஹோத்ரா

தேவேந்திர சிங் தில்லான் 

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள கல்சா கல்லூரியில் எம்.ஏ முதலாமாண்டு பயிலும் மாணவர் தேவேந்திர சிங் தில்லான்.  25 வயதுடைய இந்த மாணவருக்கு சிறிது காலத்துக்கு முன்பு ஐஎஸ்ஐ உடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் பிறகு இந்தியாவுக்கு எதிராக உளவு நடவடிக்கையில் ஈடுபடத் தொடங்கி இருக்கிறார். இவர் கடந்த 12-ம் தேதி ஹரியானாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

முகம்மது டரிப்

இவர், ஹரியானாவின் நூ மாவட்டம் கங்கர்கா கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் சிர்சா விமானப் படை தளம் உள்பட பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து பாகிஸ்தானுடன் பகிர்ந்து வந்திருக்கிறார். 

அர்மான் 

23 வயதுடைய அர்மான் ஹரியானாவின் நூ மாவட்டத்தில் 16-ம் தேதி கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் உச்சத்தில் இருந்தபோது முக்கிய தகவல்களை இவர் பகிர்ந்து கொண்டதாக இவரை அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.

இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா - பாகிஸ்தான்

நவுமான் இலாகி 

ஹரியானாவில் காவலாளியாக பணியாற்றி வந்தவர்  நவுமான் இலாகி.  இவர் பானிபட் நகரில் சில நாள்களுக்கு முன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.  உ.பி.யை சேர்ந்த இவர் பாகிஸ்தானில் உள்ள ஐஎஸ்ஐ ஆள்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

ஷாஜாத்

உ.பி-யின் ராம்பூரில் சொந்த தொழில்நடத்தி வருபவர் ஷாஜாத், மொராதாபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் பலமுறை பாகிஸ்தான் சென்று வந்திருக்கிறார்.  தேசப் பாதுகாப்புத்  தொடர்பானத்  தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

முகம்மது முர்தாசா அலி 

முகம்மது முர்தாசா அலி அவரே உருவாக்கிய மொபைல் செயலி மூலம் தகவல்களைப் பகிர்ந்திருக்கிறார்.  இவரிடம் 4 மொபைல் போன்கள் மற்றும் 3 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இவர்களை தவிர பஞ்சாபில் கசாலா என்ற பெண் மற்றும் யாமின் முகம்மது, சுக்பிரீத் சிங், கரண்பீர் சிங் என்ற 3 இளைஞர்களை விசாரணைக்காகப் போலீஸார் கைது செய்திருக்கின்றனர். 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.