கருவேப்பிலை மிட்டாய் செய்முறை
காய்கறி வாங்கும் பொழுது ஓசியாக தரக்கூடியதாக தான் கருவேப்பிலை திகழ்கிறது. அதனால்தான் பலருக்கும் கருவேப்பிலையின் அருமை தெரிவதில்லை. கருவேப்பிலையில் பலவிதமான சத்துக்கள் இருக்கின்றன. கருவேப்பிலையை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளும், செரிமான பிரச்சனைகளும், தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும், முடி உதிர்தல், எலும்புகள் பலவீனமாக இருத்தல் போன்ற பிரச்சினைகள் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கருவேப்பிலையை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் மிட்டாயாக எப்படி செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள்
கருவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
ஏலக்காய் – 4
துருவிய தேங்காய் – 1/4 கப்
நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
பேரிச்சம்பழம் – 6
நாட்டு சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி – 5
செய்முறை
முதலில் கருவேப்பிலையின் இலையை மட்டும் தனியாக எடுத்து அதை தண்ணீரில் அலசி ஒரு துணியில் போட்டு இரவு முழுவதும் வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடாய் சூடானதும் நாம் ஏற்கனவே காய வைத்திருந்த கருவேப்பிலையை எடுத்து அதில் போட்டு குறைந்த தீயில் வைத்து நன்றாக வறுக்க வேண்டும். கருவேப்பிலையை கையில் எடுத்து அமுக்கினால் அது நொறுங்கி தூள் தூளாக ஆக வேண்டும். அந்த அளவிற்கு வறுத்துக்கொள்ளுங்கள்.
அப்படி வறுபட்ட பிறகு கருவேப்பிலையை எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக துருவிய தேங்காயை அதே கடாயில் போட்டு அதன் ஈரத்தன்மை முற்றிலும் நீங்கும் வரை சிவக்க வறுத்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அதே கடாயில் விதை நீக்கிய பேரிச்சம் பழத்தை போட்டு அதனுடன் நாட்டுச் சர்க்கரையையும் சேர்த்து வறுக்க வேண்டும். நாட்டுச் சர்க்கரை நன்றாக உருகும் வரை அடுப்பில் இருக்கட்டும். அது உருகிய பிறகு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இப்பொழுது நாம் வறுத்து வைத்த அனைத்து பொருட்களும் சூடு ஆறிய பிறகு அதை மிக்ஸி ஜாரில் போட்டு இதனுடன் நான்கு ஏலக்காயையும் லேசாக வறுத்து போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். நன்றாக பொடி செய்த இந்த பொடியை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் மறுபடியும் கடாயை வைத்து நெய் ஊற்றி நெய் உருகியதும் முந்திரிப் பருப்பை சிறுசிறு துண்டுகளாக உடைத்து அதில் போட்டு சிவக்க வறுத்து அந்த நெய்யோடு முந்திரி பருப்பையும் நாம் அறைத்து வைத்திருக்கும் பொடியில் போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இதை நாம் கலந்து பிணைய பிணைய சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும்.
அப்படி வந்த பிறகு அதை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து உருட்டி ஒரு கண்ணாடி டப்பா அல்லது சில்வர் டப்பாவில் வைத்து விட வேண்டும். அவ்வளவுதான் சத்து மிகுந்த கருவேப்பிலை மிட்டாய் தயாராகிவிட்டது. இதை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தினமும் ஒன்று என்ற வீதம் சாப்பிடுவதால் கருவேப்பிலையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான சத்துக்களும் நம் உடம்பிற்கு சீராக கிடைக்கும். அதனால் கருவேப்பிலையால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் நம்மால் பெற முடியும்.
இதையும் படிக்கலாம்: சத்தான வெஜிடபிள் ஆம்லெட் செய்யும் முறை
அதிக சத்து மிகுந்த கருவேப்பிலையை சாப்பிட மாட்டேன் என்பவர்களும் இப்படி மிட்டாயாக செய்து தரும்பொழுது விரும்பி சாப்பிடுவார்கள் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
The post கருவேப்பிலை மிட்டாய் செய்முறை appeared first on Dheivegam.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

