Dhoni : நானே பழியை ஏற்கிறேன்! - தோல்வி குறித்து தோனி பேச்சு
சென்னை தோல்வி!
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையேயான போட்டி சின்னசாமி மைதானத்தில் நடந்து முடிந்திருக்கிறது. கடைசி வரை பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் சென்னை அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. தோல்விக்குப் பிறகு, இந்தத் தோல்விக்கு நானே பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என தோனி பேசியிருக்கிறார்.
பொறுப்பை ஏற்ற தோனி!
தோனி பேசியதாவது, இந்தத் தோல்விக்கான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்ள வேண்டுமென நினைக்கிறேன். நான் களத்துக்குள் சென்ற சமயத்தில் இன்னும் கொஞ்சம் ஷாட்களை ஆடியிருக்க வேண்டும். அதை செய்யாமல் தவறவிட்டுவிட்டேன்.
அப்படி செய்திருந்தால் எங்களின் மீதான அழுத்தம் குறைந்திருக்கும். அதனால் இந்தத் தோல்விக்கான பழியை நானே ஏற்றுக்கொள்கிறேன். பெங்களூரு அணி சிறப்பாகத்தான் பேட்டிங்கை தொடங்கியது. ஆனால், மிடில் ஓவர்களில் நாங்களும் சிறப்பாக பந்துவீசி ஆட்டத்துக்குள் வந்தோம்.

கடைசியில் ரோமாரியோ ஷெப்பர்ட் ஆடிய ஆட்டம் அற்புதமாக இருந்தது. டெத் ஓவர்களில் பௌலர்கள் அதிகமாக யார்க்கர் வீச கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். யார்க்கரில் அதிக தவறுகள் நிகழ வாய்ப்பிருக்கிறது. ஆனால், உங்களால் யார்க்கரை வீச முடியவில்லையெனில் Low Full Toss பந்துகளையாவது வீச வேண்டும்.

யார்க்கர்தான் ஆயுதம்!
அந்த டெலிவரிக்களையும் பேட்டர்கள் சரியாக கனெக்ட் செய்வது கடினமாகத்தான் இருக்கும். பதிரனா மாதிரியான பௌலர்கள் யார்க்கர் வீச வேண்டும். அப்படி வீச முடியவில்லையெனில் அவரிடம் நல்ல வேகம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி பவுன்சர்களை வீசி பேட்டர்களை யோசிக்க வைக்க வேண்டும். எங்கள் அணியின் பெரும்பாலான பேட்டர்கள் ரேம்ப் ஷாட்களை ஆடுவதில்லை.
ஜடேஜா ஆடுவார். ஆனாலும் அவருக்கு நேராக ஷாட்களை ஆடுவதுதான் விருப்பம். அதுதான் அவரின் பலம். அதனால்தான் அதை நம்பி கடைசி ஓவரில் ஆடினார். என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


