துணை வேந்தர்களுக்கு மிரட்டல் விடுத்த தமிழக அரசு: ஆளுநர் ஆர்.என். ரவி குற்றச்சாட்டு!
பல்கலைக்கழக துணைவேந்தர்களின் வீடுகளுக்கே சென்று காவல்துறை மிரட்டியதால் மாநாட்டில் பல துணைவேந்தர்கள் கலந்து கொள்ளவில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசு மீது குற்றம்சாட்டி இருக்கிறார். தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களின் மாநாட்டை உதகையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடத்தி வருகிறார். இந்தநிலையில், ஆளுநர் தலைமையில் 4வது ஆண்டாக இன்று மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் டெல்லியிலிருந்து கோவைக்கு விமான மூலமும், கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமும் உதகைக்கு வந்தார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் மாநாட்டை தொடங்கி வைத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரம் மோசமாக உள்ளதாகவும், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 2ம் வகுப்பு பாடத்திட்டத்தைக் கூட படிக்க தெரியவில்லை என குற்றஞ்சாட்டினார்.

பல பல்கலைக்கழகங்களுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த பின்னரே, மாநாட்டை நடத்துவதாக அவர் தெரிவித்தார். துணைவேந்தர்களின் வீடுகளுக்கே சென்று காவல்துறை மிரட்டியுள்ளதால், இதற்கு முன் இல்லாத அளவிற்கு இந்த மாநாட்டில் துணை வேந்தர்கள் கலந்து கொள்ளவில்லை என்றும் தமிழக அரசு மீது ஆளுநர் ரவி குற்றம்சாட்டினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.