தள்ளுவண்டி தக்காளி சட்னி

தள்ளுவண்டி தக்காளி சட்னி என்றாலே தள தளவென்று செக்க செவேல் என்ற நிறத்தில் பார்ப்பதற்கே சாப்பிட வேண்டும் என்று தோன்றும். அண்டா நிறைய இட்லி கொடுத்தாலும் பத்தாது அந்த சட்னிக்கு! அம்புட்டு ருசியை கொடுக்கக் கூடிய இந்த தள்ளுவண்டி தக்காளி சட்னி ரெசிபி எப்படி நம் வீட்டிலேயே எளிதான முறையில் தயாரிப்பது? அதில் சேர்க்கப்படும் ரகசிய பொருள் என்ன? என்பது போன்ற சமையல் குறிப்பு சார்ந்த தகவல்களை தான் இனி தொடர்ந்து இந்த பதிவின் மூலம் காண இருக்கிறோம்.

தள்ளுவண்டி தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள் :

வரமிளகாய் – 10
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஐந்து
பூண்டு பல் – ஏழு
உப்பு – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
தாளிக்க :
கடுகு – 1/2 ஸ்பூன்
உளுந்து – அரை ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
வரமிளகாய் – 2
ரகசிய பொருள் :
இட்லி மாவு – ஒரு கரண்டி

தள்ளுவண்டி தக்காளி சட்னி செய்முறை விளக்கம் :

தள்ளுவண்டி தக்காளி சட்னி செய்ய தேவையான எல்லா பொருட்களையும் முதலில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பத்து வர மிளகாயை கழுவி சுத்தம் செய்து மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி ஊற வையுங்கள். இந்த சட்னிக்கு மிளகாய் ஊறினால் தான் கூடுதல் சுவை கொடுக்கும். ஒரு பெரிய வெங்காயத்தை ஒன்று இரண்டாக வெட்டிக் கொள்ளுங்கள். ஐந்து பழுத்த நாட்டு தக்காளி பழங்களை கழுவி சுத்தம் செய்து ஒன்றிரண்டாக வெட்டி மிக்சர் ஜாரில் போடுங்கள்.

வெட்டிய வெங்காயம், தக்காளி, இதனுடன் தோல் உரித்த பூண்டு பற்கள், ஊற வைத்துள்ள மிளகாய் ஆகியவற்றை சேர்த்து கொஞ்சம் போல் தண்ணீர் விட்டு வழவழப்பாக அரைத்து எடுத்து வாருங்கள். அரைத்து எடுத்த இந்த விழுதை ஓரமாக வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடிகனமான வாணலி ஒன்றை வையுங்கள். அதில் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளிக்க வேண்டும்.

கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து படபடவென பொரிந்து வந்ததும், ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி சேர்த்து, 2 வர மிளகாயை கிள்ளி போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் தயார் செய்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசம் போக நன்கு வதக்க வேண்டும். இந்த சட்னி சுண்டி வரும் பொழுது, தேவையான அளவிற்கு உப்பு போட்டு, தேவையான அளவிற்கு தண்ணீரையும் தாராளமாக சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது சட்னி கொதித்து வரும் பொழுது, ஒரு கரண்டி அளவிற்கு இட்லி மாவை சேர்க்க வேண்டும். இட்லி மாவு சேர்ப்பது தான் இதில் இருக்கும் ரகசியமாகும்.

இதையும் படிக்கலாமே:
நாளை 25-04-2025 வெள்ளிக்கிழமை பிரதோஷம்

இட்லி மாவு சேர்த்து நன்கு கலந்து விட்டு, கொதிக்க வைக்க வேண்டும். எந்த அளவிற்கு உங்களுக்கு திக்காக இருக்க வேண்டுமோ, அந்த அளவிற்கு சட்னியை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான் இப்பொழுது எவ்வளவு இட்லி கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் தொட்டு தொட்டு சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு ருசியாக இருக்கக் கூடிய இந்த தள்ளுவண்டி தக்காளி சட்னியை இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்க.

The post தள்ளுவண்டி தக்காளி சட்னி appeared first on Dheivegam.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.