திருச்சி: சாக்கடை கலந்த குடிநீரா, திருவிழா அன்னதானமா? - மூன்று பேர் பலியும், அதிர்ச்சி பின்னணியும்
திருச்சி, உறையூர் பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீரில் கலப்படம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். இதனால் , இப்பகுதியில் வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக சிறுமி உட்பட 3 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து 50-க்கு மேற்பட்டோர் சிகிச்சையில் இருக்கின்றனர். சம்மந்தப்பட்ட பகுதிக்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வளர்மதி, மத்திய மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் விசிட் அடித்ததோடு, இவர்களின் இறப்புக்கு காரணம் சாக்கடை கலந்த குடிநீர்தான் என்று சொல்ல, இந்த விவகாரம் பரபரப்பானது.
இதனைக் கண்டித்து, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர்.
இந்நிலையில், மாநகராட்சி சார்பில், இரண்டு நாட்களாக அப்பகுதியில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடனடியாக குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டு, குடிநீர் குழாயில் கசிவு ஏதும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு குடிநீர் விநியோகம் செய்யும் பிரதான குழாயில் ஆங்காங்கே ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இப்பகுதியில் 15 இடங்களில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பபட்டது.
மருத்துவ ஆய்வில் குடிநீர் மூலம் தொற்று ஏதும் இல்லை என்று பரிசோதனை முடிவுகள் வந்துள்ளது. இந்த மாதிரி அனைத்தும் நெகடிவ். சித்திரை திருவிழா நடைபெற்ற போது இங்குள்ள கோயிலில் கொடுக்கப்பட்ட பானகம், நீர், மோரில் ஏதேனும் கலந்து இருக்கலாம் என்று விளக்கம் கொடுக்கப்பட்டது.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
இந்நிலையில், இப்பகுதியில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் நேரில் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமாதானம் செய்த மேயரிடம், எதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது? என்பது குறித்து விளக்கம் கேட்டனர். அதோடு, சித்திரை திருவிழாவில் பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்ட பானங்களில் கலப்படம் ஏற்பட்டு இருக்கலாம் என மாநகராட்சி சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் ஏற்புடையது அல்ல. திருவிழா நடந்து முடிந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி மேயர் அன்பழகன் தெரிவித்தார். அதன் பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், ”திருச்சி உறையூர் பகுதியில் பொதுமக்களுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்ட காரணத்தால் ஆய்வு செய்துள்ளோம். தண்ணீரில் கழிவு நீர் கலந்துள்ளதாக கூறினார்கள். ஆனால், ஆய்வில் எந்த கலப்படமும் இல்லை. என்ன காரணம் என்பது தெரியவில்லை. சித்திரை திருவிழா நடைபெற்ற போது அங்கு கொடுக்கப்பட்ட பானகம், நீர், மோரில் ஏதேனும் கலந்து இருக்கலாம் என மருத்துவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

இருப்பினும், அந்த தண்ணீரை சோதனை செய்வதற்காக நாளை காலை ஒவ்வொரு பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட உள்ளோம். பாதாள சாக்க டைப் பணிகள் அனைத்தும் முற்றிலுமாக முடிவடைந்துள்ளது. எங்கும் குழி நோண்டவில்லை. ஆனால் தண்ணீரில் கலப்படம் எனக் கூறி இருக்கிறார்கள். தண்ணீரில் எந்த இடத்தில் கலப்படம் என ஆய்வு செய்து வருகிறோம். அண்டர் டிரைனேஜ் அடைப்பு ஏற்பட்டு இருப்பதாக கூறினார்கள். அதனை சரி செய்ய அதிகாரிகளை நியமித்து உள்ளோம். இப்பகுதியில் லாரி மூலம் தண்ணீர் கொடுக்கப்பட்டு வருகிறது. இதே போல, திருச்சியில் குடிநீரில் கழிவு நீர் கலந்த சம்பவம் கடந்த காலத்தில் நடந்தது. அதனை சரி செய்து உள்ளோம். திருச்சி அரசு மருத்துவமனையில் பெரியவர்கள் 13 பேர், பெரியவர்கள் 10 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கின்றனர்" என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


