சஞ்சய் அகர்வால்: 8-வது ஃபெயில்; இப்போது வங்கிக்கு ஓனர்- 1 பில்லியன் டாலர் அதிபதியின் வெற்றிக் கதை!
எட்டாவது ஃபெயில், பட்டயக் கணக்காளர் தேர்வில் இரண்டு முறை தோல்வி எனத் தோல்விகள் பலமுறை தழுவுகிறது. இருந்தும், அனைத்திற்கும் டப் கொடுத்து இப்போது ஒரு வங்கியின் வெற்றிகரமான தலைமை நிர்வாக அதிகாரியாக வலம் வருகிறார் சஞ்சய் அகர்வால்.
யார் இந்த சஞ்சய் அகர்வால்?
ராஜஸ்தானில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் சஞ்சய் அகர்வால். அவருக்கு கல்வி எளிதாக இருக்கவில்லை. 8-ம் வகுப்பில் தோல்வியடைந்த அவர், சற்றும் தளராமல் படிப்பை தொடர்ந்துகொண்டே இருந்தார். ஆனால் என்ன கொஞ்சம் ரூட்டை மாற்றினார்.
ஆங்கில வழியில் படிக்க சிரமமாக இருக்கிறது என்று இந்தி வழிக்கல்விக்கு மாறினார்.
அஜ்மீர் அரசு கல்லூரியில் டிகிரியை முடித்த இவர், பட்டயக் கணக்காளர் ஆக வேண்டும் என்று கனவு கண்டார்.
அங்கேயும் அவரை தோல்வி துரத்தியது. சி.ஏ தேர்வில் இரண்டு முறை தோல்வியடைந்தார். இருந்தும் நம்பிக்கையை கைவிடவில்லை அவர்.
25 வயதில் சொந்த தொழில் செய்யலாம் என்ற முடிவை எடுத்து களத்தில் இறங்கியுள்ளார். 1996-ம் ஆண்டு, எந்த மூலதனமும் இல்லாமல், "ஏயு பைனான்சியர்ஸ் (இந்தியா) லிமிடெட்" என்ற சிறிய நிதி நிறுவனத்தை தொடங்கினார். புதிய வாகனங்களுக்கு கடன்களை வழங்கும் இந்த நிறுவனம் முதலில் நினைத்த அளவுக்கு செல்லவில்லை.
ஆனால், அது சஞ்சயின் தொலைநோக்கு பார்வை மற்றும் கடின உழைப்பினால் கொஞ்சம் கொஞ்சம் வெற்றிப்பாதையில் வேகம் எடுக்க தொடங்கியது.
திருப்பு முனை
2015-ம் ஆண்டு, இந்த நிறுவனத்திற்கு வங்கி உரிமத்தை வழங்கியது இந்திய ரிசர்வ் வங்கி. இது அவருடைய மற்றும் அவருடைய நிறுவனத்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
2017-ஆம் ஆண்டு, இது ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியாக (AU Small Finance Bank) மாற்றப்பட்டது. IPO மூலம் ரூ.1,912 கோடிகளுக்கு மேலான முதலீடுகளை ஈர்த்து, இந்தியாவின் முன்னணி வங்கிகளில் ஒன்றாக உயர்ந்தது.
இன்று, இந்த வங்கியின் மதிப்பு ரூ.43,000 கோடிக்கு மேல். 30 லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் வங்கியாக வளர்ந்துள்ளது. ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி, சஞ்சய் அகர்வாலின் சொத்து மதிப்பு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியுள்ளது.
தோல்விக்கு சற்றும் மனம் தளராமல் கடின உழைப்பை கொட்டிய சஞ்சய் அகர்வாலுக்கு காலம் அளித்த பரிசு அபார வெற்றி!.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


