40 கேள்விகள்... 90 நிமிடங்கள்... கொடநாடு வழக்கில் ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனிடம் தீவிர விசாரணை!
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கொடநாடு கொலை கொள்ளை வழக்கு அரசியல் ரீதியாக பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த வழக்கு விசரணை சிபிசிஐடி காவல்துறைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பல்வேறு நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதன்படி கொடநாடு எஸ்டேட்டின் பங்குதாரர்களில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியிருந்தது.
இதையடுத்து சுதாகரன் விசாரணைக்காக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று காலை நேரில் ஆஜரானார். விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பு அவர் வானத்தில் சூரியனை பார்த்து, சூரிய நமஸ்காரம் வைத்தபடி உள்ளே சென்றார்.

அங்கு சுதாகரனிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் விசாரணை நடைபெற்றது. சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் மாதவன், கூடுதல் கண்காணிப்பாளர் முருகவேல், துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் உள்ளிட்ட சிபிசிஐடி குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சுதாகரன், “என்னிடம் 40 கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றுக்கு எனக்கு தெரிந்த பதில்களை தெரிவித்துள்ளேன். காவல்துறையினர் கேட்ட கேள்விக்கு எனக்கு தெரிந்த உண்மைகளை தெளிவாக கூறிவிட்டேன். தற்போதுதான் முதன்முறையாக விசாரணைக்கு ஆஜராகி உள்ளேன்.

விசாரணை தீவிரமடைந்துள்ளதா.. உண்மை வெளிவருமா என்று எனக்கு தெரியவில்லை. விசாரணை முறையாக நடைபெறுகிறதா என்பதை நீங்கள் கேட்க வேண்டிய இடத்தில் கேளுங்கள்.” என்று கூறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


