Nithyananda: ``கைலாசா நாடு அல்ல - நித்யானந்தா சீடர்கள் 20 பேரை நாடுகடத்திய பொலிவியா; காரணம் என்ன?

மத பிரசாரகர் நித்யானந்தா உருவாக்கிய கற்பனை நாடான கைலாசாவைச் சேர்ந்த 20 பேரை நாடுகடத்தியதாக பொலிவியா அரசு அறிவித்துள்ளது.

பூர்வீக சமூகங்களின் நிலங்களைப் பறிக்க முயன்றதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிவியா தெரிவித்துள்ளது.

பொலிவியாவின் குடிவரவு இயக்குநர் கேத்தரின் கால்டெரான், "இந்த குழுவைச் சேர்ந்தவர்கள் கட்டாயமாக நாடுகடத்தப்படும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இவர்கள் இனி நாம் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை." என அறிவித்துள்ளார்.

நித்தியின் கனவு கைலாசா!

நாடுகடத்தும் நடவடிக்கை இந்த வார இறுதியில் மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நித்யானந்தா, நாட்டிலிருந்து தப்பித்து ஒரு நாட்டை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா என அழைக்கப்படும் அந்த நாடு ஈக்குவேடார் அருகில் உள்ள ஒரு தீவு என்றும் கூறப்படுகிறது.

பழங்குடி மக்கள் நிலத்தை அபகரிக்க திட்டம்!

பொலிவியாவின் குடிவரவு இயக்குநர் கேத்தரின் கால்டெரான் இது குறித்து கூறுகையில், "இந்த பிரிவினர் நம் நாட்டுக்குள் நுழைந்து நமது பழங்குடி மக்களின் நல்லெண்ணத்தையும் உரிமைகளையும் கலங்கப்படுத்தி, அவர்களை ஏமாற்றி அவர்களின் நிலங்களைப் பயன்படுத்த முயல்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

கைலாசா ஆதரவாளர்கள் பாரே, கயூபாபா மற்றும் எஸ்ஸே எஜ்ஜா ஆகிய மூன்று பழங்குடி இன மக்களின் 4.8 லட்சம் ஹெக்டேர் நிலத்தைக் குத்தகைக்கு எடுக்க ஒப்பந்தங்களில் கையெழுத்து பெற்றுள்ளதாகக் கடந்த மார்ச் 16-ம் தேதி எல் டெபர் செய்தித்தாளில் செய்தி வெளியானது. அதனைத் தொடர்ந்து அதற்கு காரணமான சீடர்களை வெளியேற்ற அறிவிப்பு வந்துள்ளது.

நித்யானந்தா

அந்த ஒப்பந்தங்களில், வருடாந்திர வாடகை செலுத்தி 1000 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தக் கையெழுத்து பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

`கைலாசா நாட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை - பொலிவியா

பொலிவியாவின் வெளியுறவுத்துறை கைலாசா என்ற நாட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியிருக்கிறது.

பழங்குடி மக்கள் தங்கள் நிலங்களை விருப்பப்படி நிர்வகிக்க முடியும் என்றாலும், பிற நாடுகளுடனான தொடர்புகள் தேசிய அரசாங்கத்தின் பிரத்தியேக பொறுப்பு என்பதையும் விளக்கியுள்ளனர்.

அரசு இதுபோன்ற மறைக்கப்பட்ட ஒப்பந்தங்களை ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும் கூறியுள்ளனர்.

பழங்குடித் தலைவர்களுக்கும் கற்பனையான நாட்டின் பிரதிநிதிகளுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

நித்யானந்தா

கைலாசாவைச் சேர்ந்தவர்கள் பிடிபட்டு, சான்டா குரூஸ் நகரில் நாடுகடத்தப்படுவதற்கான விமான நிலையத்திற்குக் கூட்டிச்செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் மீண்டும் பொலிவியாவுக்கு வருவதும் தடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச ஏமாற்று வேலைகள்

இந்தியாவிலிருந்து தப்பிய நித்யானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரது கற்பனை தேசத்தைச் சேர்ந்தவர்கள், பராகுவே நாட்டில் உள்ள ஒரு அதிகாரியை ஏமாற்றி அவருடன் ஒப்பந்தம் மேற்கொண்டதற்காக, அந்த அதிகாரி அவரது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.

நித்யானந்தா

அமெரிக்காவில் உள்ள நியூவார்க் நகர மேயரையும் ஏமாற்றி ஒப்பந்தம் மேற்கொண்டனர். இவர்களிடம் கைலாசா என்பது தென்னமெரிக்காவில் இருக்கும் ஒரு தீவு நாடு எனக் கூறியுள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.